நறுந்தண்கா, பேதை பெருமடம் நம்மாட் டுரைத்து - கார் நாற்பது 30

இன்னிசை வெண்பா

வரைமல்க, வானம் சிறப்ப, உறைபோழ்ந்(து)
இருநிலம் தீம்பெயல் தாழ, விரைநாற1
ஊதை உளரும், நறுந்தண்கா, பேதை
பெருமடம் நம்மாட் டுரைத்து! 30

- கார் நாற்பது

பொருளுரை:

மலைகள் வளம் நிறைய வானகம் சிறப்பெய்த பெரிய பூமியை துளிகளால் ஊடறுத்து இனிய மழை விழாநிற்க நறுமணம் கமழாநிற்க ஊதை காற்றானது காதலியது பெரிய மடப்பத்தை நமக்குத் தெரிவித்து நறிய குளிர்ந்த சோலையில் அசையா நிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைச் செலுத்துவாய் என்றவாறு!

உறை - நீர்த்துளி: ஊதை – குளிர்காற்று, உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர் வாரா ரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை; 1. திரை நாற என்றும் பாடம்.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (10-Oct-25, 5:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே