கர்னல் பென்னி குக்,எழுதும் கடிதம்
என் அன்பு மக்களே !!
நான் கர்னல் பென்னி குக்
தண்ணீர் இயற்கை வரம்!
தாகம் இயற்கை சாபம்!
மனித மூளை சிந்தித்தது,
மகத்தான ஓர் உபாயம் சீர்தூக்கியது!
வீணாய் கடலில் கலந்த நீர்,
விழுதாய் எழுந்தது என் தீரா முயற்சியால்!
அணை கட்டி நீர் தேக்க தெரிந்த
எனக்கு,
அனைவர் மனதிலும் ஈரத்தை
தேக்கத் தெரியவில்லை!
வனமும், வானமும்,
மண்ணும், மனமும்
இயற்கை தந்த பரிசு!
நல்ல விதை விழுந்தாலும் ,
விஷ விதை விழுந்தாலும்
உயிர் வாழ வைக்கும் தன்மை
மண்ணுக்கு.
தன் முதுகில் குத்தியவனுக்கும்
தன்னலம் கருதாது
அடைக்கலம் தந்து உதவும்
நெஞ்சம் தமிழனுக்கு!
வந்தாரை வாழ வைக்கும்
தமிழனுக்கு ,
வாய் தாகம் தீர வேண்டும்
என்பதே என் அவா!!
சிட்டுக்குருவியின் சிறகை
ஒடித்து குளிர் காய்வதில்
என்ன அர்த்தம்.
நீரை உரிமை கொண்டாட
யாருக்கும் விதி இல்லை.
உணர்வுகளுக்கு வேலி போட
உரிமையும் இல்லை.
நிம்மதியும்,மகிழ்ச்சியும் தான்
நீங்கள் தரும் பரிசானால் ,
வன்முறை விட்டு ,
அடக்குமுறை தீயிட்டு ,
அகிம்சை கொண்டு ஆட்சி செய்!
இன்னொரு வரலாறு
உருவாகட்டும்,
இன்னொரு தலைமுறை
வாழ்த்தட்டும்!!
வாழ்க தமிழ்!! வளர்க தமிழினம்!!!