நாம் மனிதர்களாம்.! .. பொள்ளாச்சி அபி

மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்..!

அடுத்தவனைக் கவிழ்த்து
சொத்து சேர்ப்பது
அம்மாவாயிருந்தாலும்
முதியோர் இல்லத்தில்
அடைத்து வைப்பது.
உறவுகளென்றாலும்
பணத்தால் அளவிடுவது
இன்னும் எத்தனைவிதமாய்
எத்தர்களாய் இருக்கிறோம்.?

..மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்..!..
ஆனால்..,
சொத்துக்களுக்கு ஆசையில்லை
சொந்தத்துக்கும் அளவீடில்லை.
அம்மாவெனிலும்,அப்பாவெனிலும்
ஆணெனிலும்,பெண்ணெனிலும்
இருபால் வித்தியாசமில்லை.
ஒருவரை ஒருவர்,
ஒருவருடையதை ஒருவர்,
கவர்ந்து கொள்ளும்
முயற்சிகள் இல்லை.
நாகரீகம்,இது நாகரீகமில்லை
என்ற பண்பாட்டுப் பேத்தல்களும்
இங்கே இல்லை..
இப்படியொரு உலகமும்
இங்கே உண்டு
அவர்கள்..
மனதால் சிந்திப்பதில்லை.
உடலின் தேவையை மட்டுமே
உணர்த்துக்கிறார்கள்..!

ஆனால் இங்கே
அவர்களுக்கும் பெயரிட்டு
ஒதுக்கி வைத்திருக்கிறோம்..
பைத்தியங்கள் என்று...!

“மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்.”
தூ..வெட்கக் கேடு..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (5-Feb-12, 2:42 pm)
பார்வை : 260

மேலே