கடவுளுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கடவுளே!

நம்பினோர் கெடுவதில்லை
உன்னை நம்பிய நான்
நடுத்தெருவுக்கு வந்தது
எப்படி என்று தெரியவில்லை?

ஒரு ரூபாய் போட்டால்
பத்து ரூபாய் தருவீர் என்று
இருந்த துட்டையெல்லாம்
உமது உண்டியலில் போட்டேன்

உமது உண்டியல் நிறைந்தது
எனது உண்டி குறைந்தது

அளவுக்கு மீறி வருமானம்
அளவில்லாமல் அவர்கள்
அள்ளி கொட்டுகிறார்கள்
அது தெரியாமல் நானும்
அறிவில்லாமல் போட்டேன்

போட்டதையாவது தாருமையா
மொட்டைத்தலை முளைத்ததுபோல்
இந்த சூதாட்டத்தில் நான்
விட்டதையாவது தாருமையா

கடவுளே நீயாவது கொடு
இல்லையேல் கொடுக்க சொல்
இங்கிருக்கும் உன் பினாமிகளை!
இப்படிக்கு
இருப்பதாக நினைத்து
இல்லாமல் போன பக்தன்!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (12-Jul-12, 9:14 pm)
பார்வை : 410

மேலே