டிசம்பருக்குள் உலகம் அழியும் பீதி கிளப்புகிறார் உமாசங்கர்

ஆத்தூர் : ""இன்னும் மூன்று மாதங்களில் உலகம் அழியும்,'' என, தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, அண்ணா கலையரங்கில், கிறிஸ்தவ போதகர்கள் சார்பில், "2012ம் ஆண்டு வரப்போகும் அழிவில் இருந்து தப்பிப்பது எப்படி' என்பது குறித்து, கிறிஸ்தவ மத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.தமிழக ஒழுங்கு நடவடிக்கை ஆணைய கமிஷனர் உமாசங்கர் பங்கேற்று பேசியதாவது:இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும் பகுதி அழிவை சந்திக்க உள்ளது. சுனாமி, சூரிய புயல், விண்கற்கள் விழுதல் போன்ற இடர்ப்பாடுகளில், ஏராளமானோர் இறந்து விடுவர். நிலத்தின் ஒரு பகுதி கடலாக மாறி விடும், கடற்கரை நகரங்கள், 15 கி.மீ., வரை அழிவை சந்திக்கும்.அவ்வாறு, ஆண்டவர் வரும் நாளில், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படும். கிறிஸ்தவர்கள், வீட்டில் வைத்துள்ள ஜாதகங்களை, தீயிட்டு கொளுத்துங்கள், குப்பையில் வீசியெறியுங்கள். ராகு காலம், எமகண்டம் குறிப்பிட்டுள்ள காலண்டர்களைக் கூட எரித்து விடுங்கள். ஜாதகங்களை நம்ப வேண்டாம். இவ்வாறு உமாசங்கர் பேசினார்.பின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், ""கிறிஸ்தவர்களிடம் மட்டும், கிறிஸ்தவ மதக் கருத்துக்களைக் கூறுகிறேன். அரசு பணியை தொய்வு இல்லாமல் செய்கிறேன். பா.ஜ.,வினர், அரசியல் சாசனச் சட்டம் தெரியாமல் பேசுகின்றனர். என் மீது, பா.ஜ.,வினர் புகார் செய்தாலும், கற்களை வீசினாலும் தாங்கிக் கொள்வேன்,'' என்றார். பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கூறுகையில், ""ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், கிறிஸ்தவ மத மாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது, சட்ட விரோதமானது. அவர் மீது, விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவரது கிறிஸ்தவ மதப் பிரசாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, புகார் செய்துள்ளோம்,'' என்றார்.

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (17-Sep-12, 11:42 am)
சேர்த்தது : நெய்வேலி ஆனந்த்
பார்வை : 472

மேலே