எங்கள் ஊர் மதுரை !

மீன்கொடி பறந்த
பாண்டிய நாட்டின்
வான்புகழ் மதுரை
எங்கள் ஊர் !

வேப்பம்பூ எங்கள் பூ
வீரம்தான் எங்கள் வாழ்வு
வெற்றி ஒன்றே எங்கள் உயிர் !

இறைவன் என்றாலும்
குற்றம் குற்றமே என்று
நின்ற ஊர் எங்கள் மதுரை !

அபலை என்றாலும்
நீதி கிடைக்கும்
என்று நிறுவிய
கண்ணகியின் காதை
நிகழ்ந்த நகர்
எங்கள் மதுரை !

வேலை சரியாகச்
செய்யவில்லைஎன்றால்
சொக்கன் என்றாலும்
சாட்டைச் சொடுக்கு
கொடுப்போம் நாங்கள்!

உலகப் பொது மறை
திருக்குறளை
உரசிச் சரிபார்த்த
சான்றோர் சங்கம்
எங்களூர் தமிழ்ச் சங்கம் !

நீதிக்குத் தலை கொடுத்த
நெடுஞ்செழியன் ஆண்ட மதுரை
எங்கள் மதுரை !

முத்துடைத்து எங்கள் நாடு
முகம் சுழிக்கா விருந்து
படைக்கும் பெயருடைத்து
மல்லிகை வாசமாய்
மணம் பரவி நிற்கும்
மதுரை எங்கள் ஊர் !

அழகர் மலையில்
அணி செய்யும்
கருப்பசாமி
முருகன் கோயில்
வள்ளி தெய்வானையோடு
நூபுர கங்கையோடும்
சாரல் விழும் சந்தனத்
தென்மதுரை எங்கள் ஊர் !

தென்பரங்குன்றத்திலே
தெய்வானையை
திரு முருகன்
திருமணம் கொண்ட ஊர்
மதுரை ஊர் !

திருமலை, இராணி மங்கம்மாள்
என்று புகழ் நிறுவும்
தங்க மன்னர்
பாதம் தாங்கி வாழ்ந்த
மதுரை எங்கள் ஊர் !

கோச்சடையான், கூளப்பன்
மருதப்பாண்டியன் என்று
குறுநில இரத்தினங்கள்
குடி கொண்டிருந்த
கூடல் நகர் எங்கள் ஊர் !

மருதநாயகம்
அன்னியர் ஆட்சியை
மறுத்தநாயகம்
மரித்த பின்னே
அவர் உடலம்
சமாதியில் உறங்கும்
சம்மட்டிபுரம்
அமைந்த ஊர் எங்கள் மதுரை !

இன்னும்தான் சொல்லவே
என்னுள்ளே ஆசை;
இருந்தாலும்
இப்போது இது போதும்
என்று சொல்லி
அடங்குகிறது
என்றன் மன ஓசை !

எழுதியவர் : முத்து நாடன் (24-Oct-12, 11:26 pm)
பார்வை : 3244

மேலே