நிலவே நீயும் வெறுத்தாயோ?

(ஏமாற்றம் என் முடிவோ என்னும் முதல் தந்த கவிதையின் மூலப்பிரதி இது)

நான் பிறந்தேன் இந்தநாட்டினிலே சிறு
வீட்டினிலே அன்புக் கூட்டினிலே
நீயிருந்தாய் அந்த வானத்திலே வெகு
தூரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீ நடந்தாய் ஒளி தான் பொழிந்தே அந்த
நீலத்திரை விரிமேகத்திலே

வானத்திலே நினைக் காண்கையிலே வரும்
மோகத்திலே நினைவானதிலே
கானத்திலே இழைராகமெனத் தினம்
காணும் இளையவள் போனதெங்கே?
மீனதிலே விழியானதென துள்ளி
மூடும் இமைகளைத் தானுடையாள்
தேனதிலே குளித்தேகும் மொழிகளைத்
தூவும் அவளினைக் காணவில்லை

சோலை மலர்களும் தூங்கியதே தென்றல்
ஏங்கியதே மணம் வாங்கியதே
மாலைவெயில் மஞ்சள் போயிடவே
மலர்மீதினிலே வண்டு தூங்கியதே
பாலையிலே உள்ள நீரெனவே இவள்
பார்வையிலே ஒளியாகியதேன்
மேலையிலே ஒளி ஆதவனும் மேனி
மாழுவதாய் எண்ணம் போனதுமேன்?

காரிருளே சுற்றிக்காணலிலே அவள்
காதலிலேமனத் தேடலிலே
நீரிலினிலே உள்ளதானலையே எனும்
நேரழகில் மனமானதுவே
தேரினிலே வரும் தேவியென அவள்
தீயெனக் காதலைத் தூண்டியவள்
ஏரெனவே இரு மார்பெழுதும் இள
ஏந்திழையோ என்னை ஏய்த்ததுமேன்

தேனெனவே வெள்ளிபாலெனவே அலை
தோன்றியதே மின்னியாடியதே
மானெனவே துள்ளி ஓடியதே ஒரு
மங்கையென்றே நதி பொங்கிடவே
தண்ணிலவே உனை எண்ணியதோ ஒரு
அல்லிமலர்ந் துள்ளம் ஏங்கியதே
எண்ணமதி லுனைத் தான்நினைத்தே பெரும்
ஏக்கமதில் நீரிலாடியதே.

இன்பம்தருங்குளிர் வீசியதே
உடல் கூசியதே மெல்ல ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
தேனெனவே செவி பாய்ந்ததுவே
அன்பை இழந்தவன் நெஞ்சினிலே வந்து
பொங்கியதே இன்பம் உன்னொளியால்
நன்றிசொல உனைத்தேடிநின்றேன் அந்தோ
நாடி வந்த முகில் மூடியதேன்?

எழுதியவர் : கிரிகாசன் (17-Nov-12, 1:18 pm)
பார்வை : 247

மேலே