திரும்பிப் பார்க்கிறேன்…. –சிந்தனையின் பரிணாமம்
சிந்தனை என்பது உணர்ச்சி, உணர்வு, ஒழுக்கம், பண்பு, கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் வரலாறு எனும் பரிமாண வளர்ச்சியில் பக்குவப்படுகிறது
சிந்தனையை வெளிப்படுத்த ஊடகம் தேவைப்படுகிறது. அந்த ஊடகம் உணர்ச்சிகள் மொழிகள் (சப்தங்கள்)
ஏன் இவை ஊடகம் எனப்படும்? ஏனெனில் ஊடகம் என்பது சுய இயக்கம் இல்லாதவை. வெளி சக்தியால் தூண்டப்பட்டு இயங்குபவை. சுயம் என்பதே இவற்றிற்கு கிடையாது. உணர்ச்சிகளும் மொழிகளும் (சப்தங்களும்) சிந்தனையால் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த ஊடகத்திற்கு மூலமே சிந்தனையின் குழந்தைகளான நோக்கமும் குறிக்கோளும் தான்.
உணர்ச்சியும் உணர்வும்--
சிந்தனை சற்றே முதிர்வு பெறும்போது நோக்கம் பிறக்கிறது. நோக்கம் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறது. ஆனால் வெளிப்படும் நிலையில் இருப்பதில்லை. அது குறிக்கோள் எனும் நிலைக்கு முதிர்ச்சி பெறும்போது மட்டுமே உணர்ச்சியாய் உரு எடுக்கிறது. உணர்ச்சியாய் உரு எடுத்த குறிக்கோள் கட்டுப்படுத்தப் படும்போது உணர்வாக மாறி பண்படுகிறது. பண்படாத நோக்கம் உணர்ச்சியாக மாறுகிறது.
நோக்கம் முதிர்ச்சி பெறாத போது, சிந்தனையாகவே இருந்து விடுகிறது. இதனால் என்ன பயன் இந்த சிந்தனைக்கு?
நோக்கம் குழப்பமான ஒரு சிந்தனையாக இருக்கிறது. அது வெளி சூழலால் தாக்கம் பெறுகிறது. எடுப்பார் கைப்பிள்ளையாகிறது. அதை யார் வேண்டுமானால் ஆட்கொள்ளலாம் எனும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த சிந்தனைதான் பயிற்சி மூலம் பக்குவப் படுத்தப்படக் கூடியது. இந்த நிலையில்தான் தீவிரவாதிகள் உருவாக்கப்படும் வாய்ப்புகள் கிட்டுகின்றன. இது மனித உடல், வயது, சூழல் மற்றும் மன வளர்ச்சி ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. வயதுக் கோளாறு என்றும் பல சமயங்களில் சாயல் பெறுகிறது.
எனவே தான் தண்டனைகள் நோக்கத்தை கட்டுப்படுத்துபடியாக வரையறுக்கப்பட்டுள்ளன. செயல்களின் விளைவுகள் அவ்வப்போது அலட்சியப் படுத்தப் படுகின்றன. ஆகையால்தான் “கோபத்தில் சொல்லும் வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது” எனும் அறிவுரை வழக்கில் இருந்து வருகிறது.
உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் என்ன வேறுபாடு?
உணர்ச்சிகள் இயல்பானவை. உணர்வுகள் கட்டுப் படுத்தப் பட்டவை. உணர்ச்சிகள் குளத்து நீர், இயல்பான அசுத்தங்கள் கலந்திருப்பது போல. உணர்வுகள் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர், பல கட்டங்களில் வடிகட்டியது போல, உணர்ச்சிகள் சுதந்திரமானவை. உணர்வுகள் பண்பட்டவை. உணர்ச்சிகள் காட்டாறு போல, பிரவாகம் எடுக்கும். உணர்வுகள் வெட்டிவிடப்பட்ட ஓடை போல, சீர் செய்யப்பட்ட வழியில் ஓடும்.
உணர்ச்சியின் நோக்கம் அது கொள்பவருக்கு திருப்தி அளிக்க வேண்டும். உணர்வுகளின் நோக்கம், அது சென்றடையும் நபர் பயனடைய வேண்டும்.
உணர்ச்சிகள் என்பவை
சிந்தனையில் பிறந்து, நோக்கத்தின் அடிப்படையில், குறிக்கோளால் தூண்டப்பட்டு, இயக்கத்தில் வெளிப்பாடு என ஆகிறது
உணர்ச்சிகள்-- சிந்தனை, நோக்கம், குறிக்கோள், வெளிப்பாடு, என்ற கட்டநிலைகளில் வளர்ச்சி பெறுகின்றன.
தொடரும்….
சந்திரன் சேகர்