எனது கறுப்புப் பெட்டி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!

எனது கறுப்புப் பெட்டி !

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!

விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி .கோவை . விலை ரூபாய் 35.

எனது கறுப்புப் பெட்டி ! நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது .விமான
விபத்துக்கள் எப்படி ? நடந்தது என்பதை கண்டு பிடிக்க உதவுவது கறுப்புப்
பெட்டி.சமுதாய விபத்துக்கள் எப்படி ? நடக்கின்றது கண்டு பிடிக்க உதவுவது
எனது கறுப்புப் பெட்டி நூல்.காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வந்த கவிஞர்
தபூ சங்கர் மற்ற கவிதைகள் எழுதிட முன் வந்தமைக்கு முதலில் பாராட்டுக்கள்
.வரவேற்பு .கவிக்கோ அப்துல் ரகுமான் அணிந்துரை நூலுக்கு அழகு சேர்க்கும்
விதமாக உள்ளது .

இன்றைய பெரும்பாலான சராசரி மனிதர்களின் இயல்பை எடுத்து இயம்பும் கவிதை நன்று .

நியாங்களுக்கும் தர்மங்களுக்கும் பயந்தல்ல
சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் பயந்தே
நல்லவனாக இருந்து கொண்டிருக்கிறேன் !

மக்களின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றார் .

என்னிடம் மோதிக் தோற்றவர்கள் எல்லாம்
என்னை எதிரியாகப் பார்ப்பதனால்
என்னிடம் மோதி வென்றவர்களை எல்லாம்
நானும் எதிரிகளாகவே பார்க்கிறேன் !

இந்த மன நிலையில் இருந்து நம் மக்கள் மாறுபட வேண்டும் .என்பதை உணர்த்திட
எழுதி உள்ளார் .எதிரியையும் நண்பனாக்கி கொள்ளும் மன நிலையை மனிதன் பெற
வேண்டும் .நமது திருவள்ளுவரின் "இன்னா செய்தாரை" திருக்குறளை நினைவில்
கொள்ள வேண்டும்.ரசியாவில் இருந்து லியோ டாலஸ் டாய்க்குள் மன மாற்றம்
விதைத்தவர் நமது திருவள்ளுவர் .

மனிதர்கள் மழை பெய்ய வில்லையே என்று மனம் வருத்தம் அடைகின்றனர். மழை
வேண்டி மூட நம்பிக்கை காரணமாக கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து
வைக்கின்றனர் .இதை கேள்விப் பட்டால் அயல் நாட்டினர் நம்மைப் பார்த்து
சிரிப்பார்கள் .

மரங்களை ஒருபுறம் வெட்டி சாய்த்துக் கொண்டே மறுபுறம் மழை இல்லையே என்று
வருந்துவதில் அர்த்தம் இல்லை .மழையின் காரணி மரம் என்பதை உணரவேண்டும்
.அதனை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

காட்டுக்குள் மனிதர்கள் நுழைகின்ற போதெல்லாம்
ஓலமிடுகின்றன சில் வண்டுகள்
மரங்களே ஓடிவிடுங்கள் !
மனிதர்கள் வருகிறார்கள் !

வானத்தில் உள்ளன் நிலவும் நட்சத்திரங்களும் பேசிக் கொள்வதுப் போன்ற ஒரு
கவிதை அமாவாசை விளக்கம் மிக நன்று .

ஒரு மூன்றாம் பிறை நாளில்
நட்சத்திரங்களிடம் கேட்டது நிலா !
" தங்கள் குழந்தைகளுக்கு தினமும்
என்னைக் காட்டிச் சோறூட்டும் அம்மாக்கள்
என் அமாவாசை நாட்களில் என்ன செய்கிறார்கள் ."

நட்சத்திரங்கள் சொல்லின !
" அம்மாக்கள் எல்லாம் சேர்ந்து உன்னை வசை பாடுகிறார்கள்
அதனால்தான் அன்றைக்கு உனக்குப் பெயர் அம்மா வசை !

வெட்டப் படும் மரத்திடம் ஒரு கேள்வி கேட்டு .மரம் மனிதன் வெட்கப்படும்
வண்ணம் பதில் சொல்வது போன்று ஒரு கவிதை .

மரமே ....
உன்னை வெட்டிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு
கடைசியாக நீ என்ன சொல்ல விரும்புகிறாய் ?
நான் வெளியிடும் கடைசி பிராண வாயுவையும்
அந்த மனிதனே சுவாசிக்கட்டும் !

கல்வியில் , பதவியில் இட ஒதிக்கீட்டை எதிர்ப்பவர்கள் கோயில் கருவறையில்
மட்டும் இன்னும் உயர்சாதிக்கான இட ஒதிக்கீடு இருப்பதை ஆதரித்து
வருகின்றனர் .அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக முற்போக்கு சிந்தனை
மிக்க கவிதை நன்று .பாராட்டுக்கள் .

கல்லே !
நீ எப்போது கடவுளாவாய் ?
தீண்டத்தகாதவர்கள் தீண்டும் போது !

மூன்று வரிகளில் மனித நேயம் விதைத்து உள்ளார் .

எள்ளல் சுவையுடன் பிள்ளையார் பேசுவது போல ஒரு கவிதை .மிகவும் ரசித்தேன்.

வினாயகரே பார்த்தாயா ?
உனக்கு எவ்வளவு பெரிய ஊர்வலமென்று
அட போங்கப்பா !
கடல் நெருங்க நெருங்க
வயிற்றைக் கலக்குகிறது எனக்கு !

காதல் கவிதைகள் மட்டுமே எழுதிய கவிஞர் தபூ சங்கர் மற்ற கவிதைகளும் எழுதி
சிந்தனை விதை விதைத்து உள்ளார் .உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கினாலும்
மதிக்காத, கல் நெஞ்சம் படைத்த கர்னாடகம் பற்றியும் எழுதியுள்ள கவிதை
ஒன்று இதோ !

நதியே அணை கட்டி உன்னைத் தேக்கி வைத்துக் கொண்டு
விட மறுக்கிறார்களே இது நியாயமா?
அந்த சோகத்தை நினைத்து அழுது அழுது
எனது தண்ணீரில் பாதி கண்ணீராகி விட்டது !

செடி வளர்ப்பதும் ஒரு சுகம் .செடியை வளர்த்தவர்களுக்கு மட்டும் விளங்கும்
அந்த சுகம் .நாம் வளர்த்த செடியில் மலர் பூத்து விட்டால் மனமும் பூத்து
விடும் .பூரித்து விடும் .இப்படி எதுவுமே செய்யாமல் இயந்தரமான உலகில்
இயந்தரமாகவே சிலர் வாழ்ந்து வருகின்றனர் .அவர்கள் கூறும் கூற்றுப் போல
ஒரு கவிதை இதோ !

எந்த மரத்தையும் வெட்டியதில்லை நான் ஆனால்
எந்தச் செடியையும் வளர்ததுமில்லை !

இன்று தமிழர்களைப் பிடித்துள்ள கொடிய நோய் தமிங்கிலம் .இதற்கு மூல காரணம்
திரைப்பாடல் பாடல் ஆசிரியர்கள்தான் . அதனை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளும்
காரணமாகின்றன.ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலம் பேசும் பொது தமிழ் கலந்து பேசுவானா
? ஆனால் ஒரு தமிழன் மட்டும் தமிழ் பேசும்போது ஆங்கிலம் கலந்து பேசும்
கொடுமை ஒழிவது எந்நாளோ ? இந்த நிலைஇப்படியே தொடர்ந்தால் நம் தமிழ்
மொழிஎன்னாகும் ? சிந்திக்க வேண்டும் .டெங்கு போல பரவி வரும் தமிங்கிலம்
பற்றி ஒரு கவிதை .

ஒரு முறை கூட யோசிக்காமல்
ஆயிரம் முறைக்கு மேல்
"SORRY "என்று சொல்லி இருக்கிறேன் !
ஆனால்
ஆயிரம் முறை யோசித்தும்
ஒரு முறை கூட
"மன்னிக்கவும்" என்று சொல்லியதில்லை !

முடிந்த வரை பிற மொழி கலப்பு இன்றி நல்ல தமிழ் பேசுவோம் .உலகின் முதல்
மொழியான நம் தமிழ் மொழி காப்போம் .போன்ற பல சிந்தனைகளை விதைத்த நூல்
ஆசிரியர்கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .எனது கறுப்புப்
பெட்டி நூல் கவிதைகள் மன இருள் போக்கி ஒளியூட்டும் கவிதைகள் .

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Jan-13, 4:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 163

சிறந்த கட்டுரைகள்

மேலே