படித்ததில் பிடித்தது (முகநூல்) padaippu :Kavanur ஸ்ரீனிவாசன் வேரோடு...
படித்ததில் பிடித்தது (முகநூல்)
padaippu :Kavanur ஸ்ரீனிவாசன்
வேரோடு பிடுங்கிவந்த
ஒரு கனவுச்செடியை
எங்கு
நடுவதெனத்தெரியாமல்
அலைந்துகொண்டிருக்கிறேன்
நெடுநேரமாய்
ஒரு
நீள்இரவுப்பாதையொன்றில்.
வழியில்
வண்ணங்கள் தொலைத்த
வானவில்லொன்று
ஒடிந்து வீழ்ந்துகிடக்க
அருகில்
யாரோ
எரித்துக்கொண்டிருப்பது
எவரின் நினைவுகளையென்று
தெரியவில்லை
புகை மூட்டத்தினூடே
விட்டுவிட்டு எரிகிறது.
காட்டுமல்லிவாசம்
சிதறிக்கொண்டிருக்க
நிலவொன்றை
பாதியாய்
வெட்டிப்போட்டுவிட்டு
தலைதெறிக்க
ஓடுகிற ஒருவனை
துரத்துகின்றன
என் கால்கள்.
பெருவெளியின் சமவெளிகளில்
புற்களில்லை
கற்கள் முளைக்கிறது
கணணெதிரிலேயே.
நீண்டுநெளிந்து
ஓடிய நதியெங்கும்
வறண்டு
முழுவதுமாய் முட்கள் படர்ந்து
எழுந்துநிற்கின்றன
விகாரமாய்ச் சிரித்தபடி.
முறிந்துவிழுந்த
மரக்கிளைகளின் கரங்களில்
கோடரிகள்.
இரவின் நடுச்சாமத்தை
கண்களில் தின்றுமுடித்து
எங்கோ
ஒரு ஆந்தையும் அலறுகிறது
எவரையும்
அருகில் நெருங்கவிடாது.
நடக்க நடக்க
நிலத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது
எனக்குப்பின்னால் வரும்
ஒரு பேருருவம்.
படுத்திருந்த
சுவற்றின் மறுபக்கம்
ஒரு நாயின் அழுகுரல்கேட்டு
கண்விழித்தபோது..
நான்
தொலைத்திருந்தேன்
ஒரு அபூர்வக்கனவையும்
நடுவதற்கென வைத்திருந்த
ஒரு செடியையும்...