எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி பூஜை பற்றியும் கொலு வைக்கும் முறை பற்றியும்...



நவராத்திரி பூஜை பற்றியும் கொலு வைக்கும் முறை பற்றியும் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதி
முதல் தசமி திதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. .

ஆதிசக்தியை வணங்குவதற்கு புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்களை
நம் முன்னோர்கள் தேர்வு செய்துள்ளனர். காரணம் அமாவாசைக்கு மறுநாளில்
இருந்து சந்திரன் வளர்ந்து வருவதால், இந்த கால கட்டத்தில் நாம் ஆதிசக்தியை
வணங்குவதால் நம்முடைய புத்தியும், செல்வமும் வளரும் என்பது
நம்பிக்கையாகும்.

“நவ” என்றால் ஒன்பது என்று பொருளாகும். ஒன்பது ராத்திரிகளில் அம்பாளை
வழிபடுவது நவராத்திரியாகும். தேவர்களையும் துன்புறுத்தி வந்த எருமைத்தலை
கொண்ட மகிஷாசுரன் என்ற அசுரனை அழிக்க தேவி 9 நாட்கள் விரதம் இருந்து
அழித்ததன் அறிகுறியாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்று தேவிபுராணம்
கூறுகிறது.


 சென்னை மைலாப்பூர், திருவல்லிக்கேணி
மற்றும் உள்ள பகுதிகளில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி
பூஜையை தொடங்கினர். 9 நாட்களும் ஒன்பது விதமான நைவேத்தியமும்
படைக்கின்றனர். முதல் நாளான நேற்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு,
பழம், மஞ்சள், மஞ்சள் கயிறு வழங்கினர்.


ஒன்பது படிகளில் கொலுபொம்மைகளை வைப்பது சிறப்பு என்பதால் பரவலாக ஒன்பது படிகளை அமைத்திருந்தனர்.


முதல் படியில் ஓர் அறிவு உள்ள புல், பூண்டு, செடி, கொடி, போன்ற தாவரங்களும்,


2-ம் படியில் நத்தை, சிப்பி போன்ற இரண்டறிவு உயிரினமும்,


3-ம் படியில் எறும்பு போன்ற மூன்று அறிவு உயிரினமும்,


4-ம் படியில் பாம்பு போன்ற நான்கு அறிவு உயிரினமும்,


5-ம் படியில் பறவை, மிருகம், போன்ற ஐந்தறிவு உயிரினமும்,


6-ம் படியில் ஆறறிவு படைத்த மனித பொம்மைகள் வைத்திருந்தனர்.


7-ம் படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளும்,


8-ம் படியில் தெய்வங்களும், நவக்கிரகங்களும், காவல் தெய்வங்களின் பொம்மைகளும்,


9-ம் பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களின் தேவியர்கள், அம்மன் பொம்மைகள் வைத்திருந்தனர்.


இச்சா சக்தியாகிய பார்வதி தேவியை முதல் மூன்று நாட்களும், கிரியா
சக்தியாகிய மகாலட்சுமியை அடுத்த மூன்று நாட்களும், ஞானசக்தியாகிய சரஸ்வதி
தேவிக்கு கடைசி மூன்று நாட்களும் ஆக ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகையை
கொண்டாடுகின்றனர்.


பத்தாம் நாள் விஜயதசமியன்று பூஜையுடன் நவராத்திரி பூஜையை நிறைவு
செய்கின்றனர். நவராத்திரியின் 9 நாட்களும் பெண்கள் தங்களின் வாழ்க்கை
பிரச்சினையை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மாலை நேரங்களில்
தோழிகளுடன் இணைந்து பக்தி பாடல்கள் பாடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.













அண்மைய செய்திகள்

நாள் : 11-Oct-15, 11:52 pm

மேலே