மென்மையானது எதுவென்று எழுதி பார்த்தேன் இப்படியாய்.. மிதமாய் வந்து...
மென்மையானது
எதுவென்று
எழுதி பார்த்தேன் இப்படியாய்..
மிதமாய் வந்து வருடும் காற்றா?
வானில் மிதந்து வரும் வெண்ணிலவா?
கொஞ்சமே பனி போர்த்திய குளிர் இரவா?
இதமான குளிருக்கு வெந்நீர் குளியலா?
முதல் மழையின் சின்ன தூறலா?
நீர் வீழ்ச்சியில் சிதறிய சாரலா?
காற்றுக்கு கொடியின் தலையாட்டா?
மலர்ந்தும் மலராத பூவின் மொட்டா?
எது மென்மை?
தாலாட்டும் (இளைய) ராஜாவின் பாடல் மெட்டா?
தமிழாடும் கண்ணதாசன் பாட்டா?
இனிய இரவின் இசைபொழுதா?
கொஞ்சும் மனைவியின் கிள்ளலா?
விதையில் இருந்து எழும் தளிரா?
குதித்தோடும் மானின் துள்ளலா?
மயில் இறகின் மெல்லிய வருடலா?
துறவி அருளிய தலைதொடலா?
ஏது மென்மை?
எது மென்மை.. எது மென்மை..
எழுதி பார்த்தேன் – என்
பிஞ்சு குழந்தை தவழ்ந்துவந்து
காகிதம் மேல் விழுந்தாள்..
பிஞ்சு பாதம் பதிக்கையிலே
காகிதம் கசங்கவில்லை – புரிந்தது
எது மென்மை...