நான்கு சுவற்றுக்குள் நான்..! நான் ..! என்று ஒன்றுக்கொன்று...
நான்கு சுவற்றுக்குள்
நான்..! நான் ..! என்று ஒன்றுக்கொன்று
முந்துகின்றன ...!
காணும் திசையெல்லாம் என் மீது கை வை என்று காதல் சண்டை போடுகின்றன ...!
பாத்திர பண்டங்களும்..!! துணிமணிகளும்...!!
முதலில் பாத்திரங்களை தடவி கொடுத்து பத்திரமாக கழுவி வைத்தேன் ....
பளபளக்கும் தட்டில் முகம் பார்க்க...
அது என்னைப் பார்த்து பல் இளித்தது..!
சோபாவிலே தூங்கிக் கொண்டிருந்த துணிமணிகளை எழுப்பி அழகாய் மடித்து அலமாரியில்
தூங்க வைத்தேன் ...!!!
தாலாட்டு பாட நேரமில்லை...
தரையில் குப்பைகள் கூடி கும்மி அடித்துக் கொண்டிருந்தன ...!!
அவர்களையெல்லாம் வாசல்வரை வழியனுப்பிவிட்டு நாளை வரும் வேறு குப்பை விருந்தாளிகளுக்காக சுத்தம் செய்து வைத்தேன்...!
நிமிர்ந்து பார்த்தேன்..!
தூசு மாலைகள் எல்லாம் போன வாரம் போனவர்கள் இன்னும் வரவில்லை ...!!!
வேறு எங்கோ ஊஞ்சலாடிக் கொண்டு இருக்கிறார்கள் போலும்...!!!
நல்லவேளை...
வேலை முடிந்தது என்று
தலையணை மடியில் சுகமாய் தலை சாய்த்தேன் ...!!!
கொடியில் ஆடின அழுக்கு உடைகள்...!!
எங்களை மறந்து விட்டீர்களே..!
என்று பாவமாய்...
அவர்களையும் அள்ளிக்கொண்டு குளிக்க வைத்தேன் ..
நானும் குளியல் முடித்து...
சமையல் முடித்து...
சாயங்காலம் ஆனது ...
சாய்ந்தது...
எனது உடலும் சற்று நாற்காலியில்...!!
ஐந்து மணி நாதஸ்வரம் காதில் ஒலித்தது ...
மருமகளே.....!!!
காப்பி தண்ணிதாம்மா..!
ஒலி கேட்டதும்
விழிகள் திறந்தன...
விருட்டென்று பறந்தன கால்கள்...
அடுப்படிக்குள் ...
ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் ஆரம்பமானது என் வேலைகள்...!
சுகமாய்..!!!