கவிதை தொக்கு - 2 - காதலாரா

ஜட புடிச்ச கொட மழையோட - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேத்துப் பின்னுன ஓல தடுக்குல
பூத்து நின்னு ஆள சாய்க்குற
நெத்தி நடுங்குற ஊச காத்துல
புத்திக் கெடுத்து மீச முறுக்குற...


களிக்காம்பு நுனிக் கீறி... நீ
சமைச்ச கருவாடு ருசியேறும்..
நம்மூரு ஏரிக்கர பசியாற..நீ
படிச்ச மொதப் பாட்டு சுதி கூடும்..


கரும்பு தோட்டப் பூ குத்தி...உன்
கண்ணு ரெண்டும் செவப்பாக..
ஒதடு ஊதுன நிமிசம் கத்தி
ஒடம்பு வேர்க்குது நெருப்பாக..


செவுத்துல எழுதுன கவிதைக்கு
முட்டி மோதி மொத முத்தமிட்ட...
புங்க மர நெழலுக்குள்ள...நீ
என்ன விட்டு நின்ன தில்ல..


மஞ்ஜா வெட்டுன மறு நாலு
கொப்பர அடுப்புல என் காலு...
நீ பேசுற நாக்குல சாமி வேலு
காதல விட்டா இதுக்கென்ன பேரு..


ஓடை ஓரம் நீ ஓட ஓட
ஊத்து ஒடஞ்சி வேக மாக
மந்த ஆறும் கடலென மாற
மொத்த ஊரும் உன் பேராக...


காது மொளச்ச காலடி தடத்துல
முள்ளு முத்தம் ஏதடி நெஜத்துல..
கனவு குதிச்ச நூறடி கெணத்துல
ஆச குளிப்பத எதுக்கடி தடுக்குற...


ஜட புடிச்ச கொட மழையோட
கைக் கோத்து நட நீ கடலாக ..
விலா ஒடியும் வர வா விளையாட
நிலா முட்டும் மின்மினி தவமாக ...


பாறாங் கல்லு பக்கத்துல
ஊராங் கண்ணு தின்ன தின்ன
ஒளிஞ்சி நின்னுக் கட்டிக்கிட்ட
நேரா சொல்ல வெட்கப்பட்டு
எங்கப்பன்கிட்ட சொல்லி விட்ட..


கரு நெறங் காட்டி சாதி பிரிச்சி
கழுத்த வெட்டி எனை எரிச்சாலும்..
உம் புள்ள சாக மாட்டா...னு
உங்கப்பன்கிட்ட சொல்லி புட்டேன்..

- காதலாரா..

எழுதியவர் : காதலாரா ( இராஜ்குமார் ) (9-Apr-16, 4:18 pm)
பார்வை : 321

மேலே