மரக்கிளையில் தூளி கட்டி --- கிராமியப் பாடல்
மரக்கிளையில் தூளி கட்டி
மன்னவனே நீயுறங்க
அம்மாவும் பாடுறேன் தாலாட்டு .
அத கேட்டு நீயும்
கண்ணுறங்கு தங்கமே கண்ணுறங்கு !
வயல் காத்தும் வந்திடுமே
வாசத்தோட வீசிடுமே !
தாலாட்டுப் பாடுகிறேன்
தாலேலோ தாலேலோ
தங்கமே வைரமே
கண்ணுறங்கு கண்ணே
நீயும் கண்ணுறங்கு !
அழகான ரத்தினமே !
அழுவாம கண்ணுறங்கு !
அத்த அடிச்சாலோ
அரளிப்பூச் செண்டாலே !
மாமன் அடிச்சானோ
மல்லிகைப்பூச் சரத்தாலே !
சிரிச்சாலே செண்பகப்பூ
சீமை எல்லாம் பூத்திடுமே !
சிங்காரச் சிட்டே !
என் பட்டுவண்ணக் கன்னத்தில
உன் எச்சில் வச்சு முத்தம்
தாடா ! என் துன்பமெல்லாம்
மாறிப்போயி உனை
அணைப்பேனே அன்போட !
என் குடும்பம் தழைக்க
வந்த குலக்கொழுந்தே !
செல்வமே ! யார் அடிச்சு
நீ அழுத ! அடித்தாரைச்
சொல்லி அழு !
அபராதம் போட்டுடுவோம் !
இப்ப நிம்மதியா கண்ணுறங்கு !
நீயும் கண்ணுறங்கு !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்