பேசா மடந்தையே

பேசா மடந்தையே விழிபேசும் சித்திரமே

சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே

இதயம் என்னும் பூப்பறித்தேன் நரம்புகொண்டு சரம்தொடுத்தேன்

கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே (பேசா மடந்தையே)



ஏழுநிறங்களை எண்ணிமுடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே

மறுபடி தோன்றுமா பார்வையிலே

பெண்ணின் மனதினைக் கண்டுதெளியுமுன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே

வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலைச் சொல்லிக் கரம்குவித்தேன் கற்புக்குப்பழி என்று கலங்குகிறாய்

பூஜைக்கு உனக்குப் பூப்பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய்

மழைதான் கேட்டேன் பெண்ணே இடிமின்னல் தந்தாய் கண்ணே (பேசா மடந்தையே)



மூங்கில்காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதைநான் ரசிக்கவில்லல

அய்யோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூள்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதைநான் சுகிக்கவில்லை

சகியே என்மனம் சகிக்கவில்லை

உன்சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி

உன்மனம் இரண்டாய் உடைந்ததென்று என்மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடிமுளைக்கும் மனம் உடைந்தால் புல்முளைக்கும்

தண்டனை என்பது எளிது உன் மெளனம் வாளினும் கொடிது (பேசா மடந்தையே


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:18 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே