பெம்மானே! பேருலகின் பெருமானே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்!
வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ!
புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்!
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
சோறில்லை! சொட்டு மழை நீரில்லை!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்!
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே!
வேராகி, ஐம்புலனும் வேறாகி,
பொன்னுலகம் சேறாகி போகமாட்டோம்!
எம் தஞ்சை, யாம் பிறந்த பொன்தஞ்சை,
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும், சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!
பொன்னார் மேனியனே! வெம் புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ!
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!