அடுப்பு

ஒவ்வொரு முறையும் கிழவியின் பேச்சில்
அடுப்பு பற்றிய அங்கலாய்ப்பே மிகையாய்
அப்படி ஒன்றும் பொங்கிப்போட
அவளுக்கென்றும் ஆளில்லை
ஆனாலும் அடுப்பின் சம்பவமே
அவளின் அலுப்பிலெல்லாம் புகையும்
‘அடுப்பில பூனை உறங்குது!’
‘அடுப்பு தான பொம்பிளைக்கு ஆற்றல் சாதனமாக்கும்!’
‘அடுப்பு ஊதறதுக்குப் புல்லாங்குழலு எதுக்கு?’
‘ஈர விறகுப்புகைச்சலில் அடுப்பிலே தீ ஏறாது!’
‘சூடுகண்ட பூனை அடுப்பங்கரையில சேருமா, என்ன?’
‘பிச்சைக்காரனுக்குப் பயந்து அடுப்பை மூட்டாமல் இருப்பேனா?’
‘அடுப்பு ஊதினா கண்ணுல தீப்பொறி விழத்தான செய்யும்?’
‘யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்யும்!’
‘அடுப்புல தீ எரிஞ்சா வயித்துப்பசி தீருமா?’
‘அடுப்புல நெருப்பில்லாம புகையுமா?’
வாதம் செய்தால் ஊதிப்பெரிதாக்குவாள்
அடுப்பின் நினைவுகளைக் கிண்டிக்கொண்டிருந்த கிழவி
மழையடங்கிய இரவில் ஒருநாள்
மரித்துத் தனியே எரிந்த போது தெரிந்தது
அடுப்பு என்று தன் கருப்பையைத் தான் கூறினாள் என்று.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:13 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே