வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்

தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தோறும்உணர் வாகும்வண்ணம்

கொள்ளும் அறம், பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத தில்லை
திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினிலேஅழைத்துச்
செல்லாததில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாதது இல்லை
இணையில்லை முப்பாலுக்கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெறும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:05 pm)
பார்வை : 30


பிரபல கவிஞர்கள்

மேலே