தும்பியும் மலரும்

மகரந்தப் பொடியைத் தென்றல் -- வாரிக்கொண் டோடி
அகம்நொந்த தும்பிஎதிர் -- அணியாகச் சிந்தும்!
வகைகண்ட தும்பிதன் -- வயிடூரி யக்கண்
மிகவே களிக்கும் அவள் -- விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் -- பொற்றாம ரைப்பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு -- வரவேண்டு கின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என -- நெஞ்சில் நினைக்கும்:
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை -- அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி -- அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் -- புதுநாதன் உண்ண
வழிபார்த்திருந்தாள் உடல் -- மயலாற் சிவந்தாள்!
தழையும் பண்ணொன்று வரத் -- தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ்தாமரைப் பெண் இதழ்க் -- கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆர்! -- ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் -- இசை பாடி வந்தான்.
கமழ்தாமரைப் பெண் இதழ்க் -- கையால் அணைத்தாள்.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 5:37 pm)
பார்வை : 25


மேலே