நான் மட்டும்...உணர்ந்ததில்லை.
நான்
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...
நீ
வரிகளாகிக் கொண்டிருக்கிறாய்.
நாம்
வாசிக்காத அர்த்தங்கள்
எப்படியோ கிடைத்துவிடுகிறது
நம்மைப் படிப்பவர்களுக்கு.
*****************************************************************
காதல்...
ஆதிச் சொல்லாய் இருக்கலாம்.
என்றாலும் புதுப்பிக்கப் படுகிறது...
எல்லா உயிர்களிலும்...
"அம்மா" என்ற சொல்லைப் போல.
*******************************************************************
தீபம் காட்டப் படுகிறது...
கடவுள்
வெளிச்சத்தில்...
உன்னைப் பார்த்துக் கொள்கிறார்.
*******************************************************************
என் காதலின் அடையாளமாய்...
மரத்தில் உன் பெயர்
எழுதி வைத்தேன்.
உன் பெயரைப் படித்துக்கொண்ட
மரம்..
இலைக் கையை அசைக்கிறது
நீ வரும் போதெல்லாம்.
*******************************************************************
தரை பார்த்து
நடந்து செல்கிறாய் நீ.
தொடரும் என் சுவடுகளில்...
மழை பெய்து போகிறது
உன் கண் நடந்த பாதை.
*******************************************************************