முற்றத்துக் கொட்டகையில்

முற்றத்துக் கொட்டகையில்
வைக்கோற் போருக்குப்
பக்கத்திலே
நாளைக்கு வெட்டப்படப்போகும்
இரண்டு மாடுகள்

நல்ல கறவை மாடுகள்தான்
யார் தீனி போடுவது
வளவிற்குள் புல்லுமில்லை
காரணம் தண்ணியில்லை
தனக்கே உணவில்லை
எனும்போது
மாடுகளுக்கு எப்படிப் போடுவது

இருந்தாலும்

படுபாவி ......

இரண்டிற்கும் சேர்த்து
அறுபதுதான் கொடுத்தான் .

வயிற்றை கழுவியாகனும்
மகனின் படிப்பு வேறு
நாம்தான் படிக்கவில்லை
அவனையும் விட்டுவிட்டால் ......

மனிதனை மனிதன்
சாப்பிடும் நிலையில்
அவனாவது படிக்கவேண்டும்
இல்லை ....இல்லை .....
வாழ வேண்டும்

அந்த முற்றத்தில்
கட்டியிருக்கும்
இரண்டு ஜீவன்களின்
கண்களில் பார்க்கிறேன்
எந்தக் கவலையுமில்லை

ஒருவேளை
ஒரு குடும்பத்தின்
வாழ்க்கைக்கான
தியாகம்தான் தெரிகின்றதோ

மகனே ...
நீ அன்புடன் வளர்த்த
இந்த இரு ஜீவன்களுக்காவது
படிக்க வேண்டும் .....

வாழ வேண்டும் ....

எழுதியவர் : கலைப்பிரியன் (அனுஜன் ) (1-Mar-13, 10:53 pm)
பார்வை : 84

மேலே