என் கிராமத்து பள்ளி வாழ்க்கை
அழுக்கு படர்ந்த தோல்பை
அதில் அங்கும் இங்குமாய்
சில ஓட்டைகள்
காகித கப்பலுக்காய்
முதல் பக்கங்களை
இழந்த சில புத்தகங்கள்
பற்களுக்கு இடையில்
அடிகடி சிக்கி கடிபட்டு
மீதப்பட்டு இருக்கும்
எழுதாத எழுதுகோல்
நெலிந்தும்
சின்னதாய் கிழிந்தும்
வட்ட வடிவ தட்டு
மதிய உணவிற்கு
எனக்காய் வரிசையில்
எண்ணெய் ஒழுகும் தலை
நெற்றியில் சின்னதாய் திருநீர்
துவைக்க மறந்த மேலாடை
இடுப்பில் நிற்காத கால்சட்டை
இப்படி பள்ளி செல்ல ஒருநாளும்
அடம்பிடித்ததில்லை
தப்பு செய்து தினம்
அடிவாங்கமலும் தப்பியதில்லை
அப்பாவிற்கு பயந்ததைபோல்
ஆசிரியர்க்கு பயந்ததாய்
நினைவில் இல்லை
பள்ளியெங்கும்
கில்லி கோடு தாண்டும்
பட்டிதொட்டி
பட்டாம்பூச்சி நாங்கள்
புழுதி பரப்பி
வெயிலை துரத்தி
வெகுமதியாய் வியர்வை துளிகளை
விலைக்கு கொடுப்போம்
காலை நேர கபடியில்
கலைத்து போகும் கதிரவன்
மாலை நேர விளையாட்டோடு
இளைப்பாற வைக்கும் இரவு
விடுமுறை என்றாலும்
வீட்டில் இருந்ததில்லை
கை ஒடிந்த போதிலும் நண்பனை
காட்டிகொடுத்து பழக்கமில்லை
சிறு காயங்கள்
வலிக்காது
அம்மாவின் அரவணைப்பில்
பல காயங்கள் சொல்லாமலே
ஆரிபோகும் அப்பாவின் முறைப்பில்
பொன்வண்டு பிடிக்க
கொன்னை மரம் ஏறுவோம்
கிளிபிள்ளை பிடிக்க
தென்னை மரம் ஏறுவோம்
பத்து பைசா மிட்டாய் பார்த்து
எச்சில் விழுங்கிய நேரமது
இரண்டு ரூபாய் நோட்டில்
கமல் படம் பார்த்த காலமது
என்ன படித்தேன் என்று
இதுவரை நினைவுக்கு வரவில்லை
யார் கூட படித்தேன் என்பது மட்டும்
நினைவில் வந்து வந்து போகிறது....