தேசமகனின் அறைகூவல்

வெளியேறி வந்தவர்களின் செய்திகளோடு
ஒரு அரைப்புள்ளியில்
சமநிலை பிறழாது இருக்கிறேன்
பெரும் மெய்மையற்ற ஊழி
வீரியமேயில்லாத இருள்மையால்
நிலத்தை புணர்ந்தபடியிருக்கிறது
எனது நிலம் எப்போதுமே
நம்பிக்கைகள் கருக்கொள்ளும் கருவறை
எமைத் தாக்கவரும் காலடிகளின்
விசமுணர்ந்து
முத்தப்பன் கடல் அலையெழுப்பியது
எனக்கான ஆன்மா மட்டுமன்றி
எல்லோரினதும்
அச்சவெளியில் அம்மணமாகவே அலறுகிறது
எமது எலும்புகளிலும்
ரத்தச் சகதியிலும்
பிரபஞ்சத்தின் நீளும் செவிட்டுத்தனங்கள்
புதிய இசை வடிவம் தேடுகிறது
ஆனாலும்
காத்தலின் சக்தியென்பது
கானகம் பேசத் தொடங்கும்
நாள் வரைக்கும் புலராது .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (29-May-13, 11:47 am)
பார்வை : 144

மேலே