********யாகம்**********

பார்ப்பனர்களுக்கும் பார்பனரல்லாதார்களில் பெரும்பான்மையோருக்கும் வித்தியாசமிருப்பதாக பார்ப்போமேயானால், சொல்லப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான், அதாவது பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவதில்லை என்பதும், பார்ப்பனரல்லாதார் மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதேயாகும்.

மாமிசம் சாப்பிடுவதிலும், பதார்த்தத்தில் உள்ள குணா தோஷங்கள் பற்றி - அதாவது காய்கறிகளுக்கும் மாமிசத்திற்கும் உள்ள ருசி குணம் முதலியவைகளை பற்றி கூட அல்லாமல் - ஒரு ஜீவனை வதைப்பது கூடாது என்பதான ஜீவா ஹிம்சையையே பிரதானமாக கருதி சொல்லப்படுகின்றது.

இதை உத்தேசித்தே ஆங்காங்கு ஜீவகாருண்ய பிரசாரமும், கொலை மறுத்தல் பிரசாரமும், புலால் உண்ணாமை பிரசாரமும் எவ்வளவோ செய்யப்பட்டு வருகின்றன.

இப்படியிருக்க, இந்த நாளில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி தெய்வத்தின் பெயராலும், மத்தத்தின் பேராலும், மோஷத்தின் பேராலும் ஜீவன்களை வதைத்து கொன்று தின்பதானது மோஷத்திற்காக செய்யப்படும் காரியமாய் பாவிக்கப்படுகிறது, ''என்ன நமது அறிவீனம்!'' மாமிசம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? பாவமா புண்ணியமா? அவசியமா இல்லையா? என்பதை பற்றி விவகாரத்தை நாம் இந்த விசயத்தில் வைத்துக்கொள்ளவில்லை.

''படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவை படைத்தான் தன்னை வணங்க'' என்கின்ற கொள்கையை மதமாக உடையவர்களும், ராமன் நன்றாக வெந்த நல்ல நல்ல மாமிசமாக பார்த்து பொறுக்கி எடுத்து சீதைக்கு கொடுத்தான் என்கின்ற புராணத்தை கும்பிடுவதை மதமாக கொண்டவர்களும், எச்சில் மாமிசத்தை, அதாவது தான் கடித்துத் தின்று ருசி பார்த்தபின்பு சிவனுக்கு படைத்து அதனால் மோஷமடைந்த பக்தர்களை பாடி மோஷமடைவதை மதமாக கொண்டவர்களும், ஆடும், கோழியும், பன்றியும், எருமைகிடாவும் அடுக்கடுக்காக கொன்று பூசை செய்ய வேண்டிய கடவுளை கும்பிடுவதை மதமாக கொண்டவர்களும், வீணாகப் மனிதனின் பசிக்கு உதவுவதால் யாருக்கென்ன நஷ்டம் என்பவர்களும், தண்ணீரை காய்ச்சி சாப்பிட்டால் அதிலுள்ள பல ஜீவன்கள் சாகக்கூடும் ஆதலால் காய்ச்சாமல் சாப்பிட வேண்டுமென்றும், விளக்கு வைத்தால் அதில் பல பூச்சிகள் வந்து விழுந்து சாகுமாதலால் இருட்டில் இருக்க வேண்டுமென்றும், மூச்சுவிட்டு சுவாசித்தால் சுவாசத்தினூடே பல பூச்சிகள் உள்ளே போய் இறந்துவிடும் ஆதலால் வாயையும் மூக்கையும் துணியால் மூடிக்கொள்ள வேண்டுமென்றும் சொல்கிறவர்களும் இருக்கும்போது மாமிசம் சாப்பிடுவது சரியா தப்பா என்பதை சுலபத்தில் முடித்துவிட முடியாது.

ஆனால் வேதத்தின் பேரால் கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஆடுகளை வைத்து கொன்றது சரியா என்பதுதான் இவ்விசயத்தின் கருத்தாகும், இஸ்லாமியர்கள்கூட இப்படித்தான் ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான ஆடுகளை கொன்று குவிக்கிறார்கள் இன்னொரு உயிரை கொன்று தின்பதற்கு மனிதனுக்கு என்ன அருகதை இருக்க முடியும்?

கசாப்புக் கடைக்காரனோ அல்லது வேறு கீழ்தர கடவுள்களோ ஜீவன்களை ஒரே வெட்டாக ஒரு வினாடியில் வெட்டிவிடச் செய்கின்றார்கள், ஹிம்சை என்பதை அச்ஜீவன்கள் ஒரு சிறிதும் அனுவிப்பதற்கில்லாமல் திடீரென்று வெட்டிவிடுகிறார்கள்.

யாகத்தின் பேரால் 'உயர்ந்த வகுப்பு' பார்பனர்கள் 'உயர்ந்த வகுப்பு கடவுளுக்கு' மோச்சத்திற்காக, உண்ணுவதற்கு, பலி கொடுப்பதற்காக செய்யும் கொலையில் மேல் கண்டபடி வெட்டாமல் உயிருடன் விரையை நசுக்கியும், தோலை உரித்தும் வேண்டிய அவயங்களை உயிருடன் இருக்கும்போதே அறுத்தெடுப்பதும், என்றால் எவ்வளவு கொலை பாதகம் - சித்திரவதை - கடுஞ்சித்தம் என்பதை கவனித்து பார்க்க வேண்டும் என்றே வேண்டிகொள்ளுகின்றோம்.

ஒரு ஜீவகாருண்ய சங்கமாவது, கொலை மறுத்தல் கூடமாவது, சிவனடியார் திருகூட்டத்தாராவது, இதை பற்றி ஒரு வார்த்தையாவது இதுவரை பேசினவர்கள் இல்லை.

மதமும் கடவுளும் சுயராஜ்யமும் எப்படி புரட்டின்மீதே கட்டப்பட்டு இருக்கின்றதோ அது போலவே ஜீவகாருண்யமும் கட்டப்பட்டு இருக்கிறதே யொழிய உண்மையான தத்துவத்தின் பேரில் இல்லை.

இதுதான் இப்படி புரட்டு இயக்கம் என்றால், ஜீவஹிம்சை நிவாரண சங்கத்தார் அதாவது S.P.C.A சங்கத்தார் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
அவர்கள் இந்த இயக்கத்தின் பெயரால் கொலை பாதகம் செய்த பார்பனர்களை s .P.C.A சட்டப்படி நடவடிக்கை நடத்தி ஏன் தண்டித்திருக்க கூடாது என்று கேட்கின்றோம்.

மதத்தின் பேராலும் சுவாமி பேராலும் செய்யும் காரியங்கள் குற்றமல்ல என்று சொல்வார்களானால், நமது சுவாமிகள் எல்லாவித பாபத்திற்கும் காரண பூதமாகவும், உடந்தையாகவும் இருக்கின்றது என்பதில் என்ன சந்தேகம்?

பார்பனர்கள் எது செய்தாலும் அது மோச்சத்திற்கும் சுயராஜ்யத்திற்குமாக ஆகிவிடுகிறது, அதே காரியங்களை நம்மவர்கள் செய்தால் தேசத் துரோகமும், தெய்வத் துரோகமும் ஆகிவிடுவது அநியாயமாகும்.

*********************

குடி அரசு - தலையங்கம்- 13-05-1928
பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி-6,
பக்கம் - 247, 248

நன்றி
குடியரசு

எழுதியவர் : தந்தை பெரியார். (13-Jun-13, 12:32 pm)
சேர்த்தது : எமதர்மன்
பார்வை : 90

மேலே