தேவதாசி ஒழிப்புச் சட்டம் - பகுதி -2

தேவதாசி மசோதா;-
**********=======*********
***********=======*********
------------------------------இந்த சமூகக்கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது, 1906, 1907 ஆம் ஆண்டுகளில் உலக தேசிய மாநாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப்பதற்காக பல மகான சர்கார் அபிப்பிராயங்களையும் அறிந்து தம்மால் கூடியவரை ஒழிப்பதென முதவு செய்யப்பட்டது, இந்திய கவர்மெண்டும் இந்த தேவதாசி மசோதாவில் அதிக சிரத்தை காட்டி வந்தது.
1912 ஆம் ஆண்டு பழைய இம்பீரியல் சட்ட நிருபன சபையில் மூன்று இந்திய அங்கத்தினர்கள், கணம் மாணிக்கஜிதாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியோர்கள், இந்த கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறு மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர்.
இந்திய சர்கார் உள்நாட்டு சர்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்தவுடன் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாங்களாகவே ஒரு மசோதாவை கொண்டு வந்தார்கள், மீண்டும் அம்மசோதா ஒரு தேர்வு கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்களது கருத்துக்களையும் 1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றார்கள், அந்த அறிக்கை மறுபடியும் பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விடப்பட்டது.
இம்மசோதாவை நிறைவேற்றுவதில் எல்லோருக்கும் பூரண எண்ணமிருந்த போதிலும், அத்தகைய பெண்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது போன்ற சில சில்லறை விவாதங்கள் கிளப்பிவிடப்பட்டதால் அம்மசோதா தானாகவே அது சமயம் மறந்துவிட்டது.
அதன் பின்னர் 1922 ஆம் ஆண்டு டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டு வந்தார், தீர்மானத்தின்மேல் விவாதம் நடந்தது கடைசியாக அது மறுபடியும் பொதுஜன அபிப்பிராயத்திற்கு விடப்பட்டு அதிகப்படியான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது, பிறகு 1922 ஆம் ஆண்டிற்கான தீர்மானம் 1924 ஆம் ஆண்டு அதை சட்டமாக்கப்பட்டதோடு, அதை அனுசரித்து இந்தியன் பினல்கோடு 372, 373 பிரிவுகள் திருத்தப்பட்டன, அதன் சட்டம் 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமுலுக்கு வந்தது.
ஆதியில் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பொட்டுக் கட்டுதல் கூடாதென்றே சாஸ்திரத்தால் தடுக்கப்பட்டு இருக்கிறது, ஏனெனில் பொட்டுக் கட்டப்பட வேண்டிய பெண் சாஸ்திரப்படி கன்னிகையாய் இருக்க வேண்டும், ஆதலால் 14 வயதிற்கு உள்தான் இந்த சடங்கு செய்வது வழக்காமாக இருந்து வந்தது.
அதாவது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்குமேல் பொட்டுக் கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனுமதிப்பதில்லை, ஆனால் இப்பொழுது மேற்படி சட்டம் வந்த பிறகு 16 வயதிற்கு கீழ்பட்ட பெண்களுக்கு பொட்டுக் கட்டப்பட்டால் கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு அந்த விதமாக அநேக வழக்குகள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்று இருக்கிறார்கள்.
ஆகவே வைதீகர்களது அபிப்பிராயப்படி பார்த்தாலும்கூட, சாஸ்திரப்படி 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோயில்களில் பொட்டுகட்ட மத அனுமதி இல்லையென்று தெரிகிறது.
இந்தியன் பினால்கோடுபடி ஒரு மைனர் பெண்ணை பொட்டுக் கட்டுவது குற்றமென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்கு பொட்டுக் கட்ட கோவிலில் இருந்து உத்தரவு பெற்று விடுகிறார்கள், இது விபச்சாரத்திற்கு அனுமதி கொடுத்ததாகுமே அன்றி வேறில்லை.
பொதுஜன அபிப்பிராயம் இதை சட்டமாக்க விருப்பப்பட்டு இருக்கிறது, பத்திரிகைகளில் பொட்டுக்கட்டுதலை ஆதரித்து எழுதியும் பொதுக்கூட்டங்களில் ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், இந்த கொடிய பழக்கத்தினால் அல்லலுறும் சமூகத்தினரே இதை சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும் இருக்கின்றனர்.
மாவட்ட போர்டு முனிசிபாலிட்டிகலிலும் தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர், இவ்வாறெல்லாம் இருக்க இச்சட்டத்திற்கு பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்புவானேன்-? என்பது விளங்கவில்லை.
''-''-ஒழிக்க யாருக்கும் ஆட்சேபனையோ எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது, தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானதுமட்டுமல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியாகும்.''-''-
''-''-ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணினத்திற்கே ஏற்பட்ட இழிவாகும், ஆகையால் இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெரிதும் பாதிக்ககூடியதாய் இருக்கிறது,''-''-
''-''-அன்றியும், ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமூகத்தையோ விபச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர் அவர்களை இழிந்த சமூகமாக கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும்,''-''-
''-''-சிறு குழந்தைகளிளிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது சனசமூக விதிகளையே மீறிய செயலாகும், எனவே இப்படிப்பட்ட நிலைமையில் இனி இதைப்பற்றி பொது மக்களுடைய அபிப்பிராயத்தை தெரிய வேண்டிய அவசியமில்லை.''-''-
''-''-தவிர இந்த விசயத்தில் சாஸ்திர சம்மந்தமான வைதீகர்களின் ஆட்சேபனைக்கு இடமில்லை, ஏனெனில் சாஸ்திரத்தில் 14 வயதுக்கு முன் கன்னிப் பெண்ணாய் இருக்கும்போதுதான் பொட்டுக் கட்ட வேண்டும் என்று இருக்கின்றது, இந்தியன் பினல்கோட் 372, 373 பிரிவின்படி 18 வயதிற்குள் பொட்டுக் கட்ட கூடாது என்றும், கட்டினால் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் அபதாரமும் என்று இருக்கின்றது.''-''-
''-''-ஆகவே இது விஷயத்தில் வைதீகமும் இந்து மதமும் 1924 ஆம் ஆண்டிலேயே ஒழிந்துவிட்டது, இந்நிலையில் இப்போதைய வைதீகர்கள் என்பவர்கள் என்பவர்கள் பொட்டுகட்டுதலை நியாயப்படுத்த முயன்றால் ஒன்று அவர்கள் சாஸ்திரம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தாசிகள் மூலம் தங்கள் வகுப்பார்களில் சிலர் வயிறுவளர்ப்பது கெட்டுப் போகுமே என்கின்ற சாதி அபிமானமாக இருக்க வேண்டும்.''-''-
''-''-அடுத்தாற்போல், பொது ஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச் சட்டத்தை ஏற்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்ற தன்மையாகவோதான் இருக்க வேண்டும்.''-''-
''-''-ஏனெனில், இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விபச்சாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த ச்மூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களேயானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது, மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்பிற்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால் அவர்களைப்போல் சுயமரியாதை அற்றவர்களும் இழிகுலமக்களும் யாரும் இருக்க முடியாது.''-''-
எந்த பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக்கலாம் என்று கருதி அதற்காக சுவாமியையும் மதத்தையும் உதவிக்கு உபயோகபடுத்த நினைத்தால் அவர்களைபோல் ஈனப்பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது, ஆகவே இந்த ''தேவதாசி ஒழிப்புச் சட்டம்'' சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டியது மிக்க அவசியமும் யோக்கியமான காரியமும் ஆகும், ஆனால் அப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க சட்ட உறுப்பினர் ஆட்சேபனைகளை கிளப்பி இதை பொதுஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தடைபடுத்திவிட்டது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
அதற்கு அனுகூலமாய் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவர்கள் ஓட்டுக் கொடுத்தது அவர்களுக்கு மிகவும் மானக்கேடான காரியமாகும், இப்படி டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நமக்கு எழுதி இருப்பதை பார்க்க நமக்கு தாங்க முடியாத அவமானமாகவே இருக்கிறது.
எப்படியும் அடுத்த சட்டசபை கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால், சர்காரின் யோக்கிதையும் சுயமரியாதையும் தெருவில் போகிறவனுக்கும் கூட நம்பிக்கையை இழக்கச்செய்யும் என்றே சொல்வோம்.
*************************
குடி அரசு - தலையங்கம்
நாள் - 23-03-1930
தந்தை பெரியார்.
நன்றி;-
பெரியாரின் எழுத்தும் பேச்சும்; தொகுதி -10
பக்கம் - 104,105,106,107,108