விலாசம்...!

வற்றிப் போன விவசாயம்...
காய்ந்து கிடக்கும் நிலங்களின்
கண்ணீரில் மரித்துக் கிடக்கும்
மனிதர்களின் நூற்றாண்டு கலாச்சாரம்!
எப்போதும் போல கூவும்...
அந்த ஒற்றைக்குயிலின் ஒப்பாரியில்
ஒளிந்து கிடக்கும் மனிதர்களின் சோகம்...
கிராமங்களில் தொலைத்த வாழ்க்கையை
மீட்டெடுக்கும் ஆசையில்... நகரம் நோக்கி
நகரும் மனிதர்களின் நகரல்களில்
மேலும் மேலும் நிறைக்கப்படும் வெறுமை!
வழக்குகள் ஏதுமின்றி வறுமையோடு
முட்டு திண்ணைகளில் கடந்த
கால பஞ்சாயத்துகளை...
கனவுகாணும் வெள்ளை மீசைகள்!
பயில வழியில்லாத வேளாண்மையை
கணிணி கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில்
கான்வென்ட்டுக்கு செல்லும் குழந்தைகள்...
வறண்டுதான் கொண்டிருக்கிறது கிராமங்கள்..
வருங்காலத்து மியூசியங்களில்...
இடம் பெறும் பெரு முயற்சியோடு!
ஒரு வரலாற்று பிழையை சமகாலத்தில் காணும் தலைமுறையாக நாமிருப்பது ஒரு வருத்தம் தோய்ந்த செய்திதான்.....! என்னவெல்லாம் செய்து கிராமங்களை காப்பாற்றுவது அல்லது என்னவெல்லாம் செய்து மனித கட்டமைப்பை சுத்திகரிப்பது என்று விளங்க முடியாத அளவிற்கு சிக்குப் பிடித்துப்போய் கிராமங்களின் சுயதன்மை அழிய எத்தனித்திருக்கிறது.
நாகரீக வளர்ச்சி என்ற ஒரு தவிர்க்க முடியாத மாற்றத்துக்குள் உற்சாகமாய் நுழையும் அதே நேரத்தில் நமது இயல்புகள் அல்லது அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய சில விசயங்களை நாம் இழந்து கொண்டிருப்பதுதான் ஒரு ஜீரணிக்க முடியாத விசயம்.
நவீனத்தை உட்புகுத்தி ஏன் நாம் விவாசாயம் செய்யக்கூடாது என்று கேள்விக்கு பதிலாய் விவசாயம் என்பது ஒரு பழமையான ஒரு தொழிலாக நாகரீகத்திற்கு பொருந்தாத ஒன்றாக பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டதால் இப்படிப்பட்ட கேள்விகளையே பழைய பஞ்சாங்கமாக்கி ஒதுக்கும் ஒரு நிலை இருக்கிறது.
அமைதியும் ஒருவித எதார்த்த கூட்டமைப்பு வாழ்க்கையும், விழாக்களும், விவாதங்களும், ஆடு, மாடு, கோழி, எருமை, நாய், என்ற சிறு மிருகங்களோடு சேர்ந்து வாழும் ஒரு அன்றாடமும் மாறவேண்டும் என்பதில் எனக்கு நவீனமும் தெரியவில்லை நாகரீகமும் தெரியவில்லை.
டீசல் கலாச்சாரம் தவிர்க்க முடியாத நிர்பந்திக்கப்பட்டதாய் இருக்கும் நகர வாழ்க்கையிலிருந்து மனிதனை அரவணைத்து சுத்திகரிக்கும் ஒரு சொர்க்கமாக அவரவரின் கிராமங்கள் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. கிராமங்களின் தனித்தன்மைகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும் அதே சமயத்தில் உயிர்களின் இயல்பு தப்பி பிழைக்க வேண்டும்...
" தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் "
என்ற சர்வைவல் தியரி படி மனிதன் பிழைப்பு தேடி நகரத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாததாய் போனதின் பின் புலத்தில் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளையும், உயிர் நாடியான விவசாயத்தை பற்றிய ஊக்குவிப்புகளையும் மெலும் படித்த இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்ச்சியையும் கொடுக்க தவறிய அரசின் பங்குதான் மிகையாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.
இந்தியாவின் உயிர் நாடி கிராமங்கள் என்று தேசப்பிதா சொன்னதை மறந்துவிட்டு ஏதோ ஒரு இலக்கு நோக்கி பயணிக்காமல்... நவீனத்தை பயன்படுத்தும், நாகரீகத்தை வரவேற்கும் அதே நேரத்தில்....
இந்தியாவின் இதயதுடிப்பு நிற்கும் தருவாயில் இருக்கிறது என்பதை சுதந்திரத்தை போற்றும் ஒரு தேசத்தின் அரசும் மக்களும் மறந்து விடாமல் உண்மையான தேசத்தின் விலாசத்தை காப்பாற்றியே ஆக வேண்டும்!