சாகட்டும் சாதி!

சாதிக்க தெரியாத
சாதிக்காக
சாகத் துடிக்கும்
தலைவர்களை
மன்னிக்க முடியாது.

போதிக்க தெரியாமல்
போய் இருந்தால்
போதி மரத்தடி
புத்தனும் செய்தது
பொய் தவம்
என்று ஆகியிருக்கும்.

சாதிக்காக
ஊனத் தலைவர்கள்
ஊமை ஆகலாம்.
எழுதத் தெரிந்தவன்
ஏமாறலாமா?

எழுத்து வித்தகம்
தெரிந்த பின்னும்
மௌனம் மொழியும்
மனிதர்களே!
கவசகுண்டலம்
தரித்தவன் என்றாலும்
அநியாயம் செய்தவனை
அங்கீகரிக்காதீர்கள்.

எதிர் முனையை
இழுக்கும் காந்தம் என்றாலும்
அதற்கு
ஒத்த முனையை
எதிர்க்கும் குணமுண்டு
என்பதை உணர்ந்திடு மனிதா!

காந்தம் போல் வாழ்.

சாதி!
சவக்குழியின்
அனுமதிச் சீட்டு.
போக்கிரிகளின்
பொய்முகக் கவசம்.

பஞ்சாங்கம் பார்க்க
சொன்னவர்களின்
வஞ்சகத்தால்
வந்த வினை.

அஞ்சாமையை
அறுவடை செய் மனிதா!

ஆளத் துடிப்பது மட்டும்
ஆளுமை ஆகாது.
ஆளுமை என்பது
தேர்தல் தீர்ப்பின்
முடிவும் ஆகாது.

சக மனிதனை நேசிக்காத
உத்தியும் வித்தையும்
பொக்கிஷம் ஆகாது.
புரிந்து கொள் மனிதா!
போகட்டும் சாதி!
சாகட்டும் சாதி!

எழுதியவர் : மோசே (26-Aug-13, 12:00 am)
பார்வை : 83

மேலே