காதல் மைனாக்கள்...[ஓரு பக்க கதை ]

காதல் மைனாக்கள்...[ஓரு பக்க கதை ]
இரண்டு நாட்களாக வீட்டில் ஒரே இடி, மின்னல்...

வீட்டிலா...? திகைக்காதீர்கள் வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை அதைத்தான் இப்படி சொன்னேன்.

பிரச்சினை ஓயவில்லை...

ஏங்க உங்களால வர முடியுமா..? முடியாதா..? சொல்லுங்க...

நான் ஏதும் போசவில்லை...

உங்க ஆளுங்க விசேசம்னா..தட்டாம வந்தீங்க...

இல்ல அதப்பத்தி சொல்லல... வேல..

ஆமா பொல்லாத வேல எப்பப்ப...பாரு... க்..உ..
முகத்தை திருப்பிக் கொண்டாள்.

விசயம் இதுதான். அவளின் உறவினர் திருமண நிச்சய ஏற்பாடு...வரும் புதன் கிழமை...எனக்கு ஆடிட் வேலை ஆட்டத்தை சரி பண்ணனும். முன்பே முடித்துவிடலாம் என்றிருந்தேன்.

ஏங்க மறுபடி சொல்றேன் அப்புரம்..உங்க (..உங்க ஆளுங்க..)
எந்த விசேசத்துக்கும் என்ன கூப்பிடாதீங்க...ஆமா...

இப்படியே வாக்குவாதம் ஒன்றுகில்லாத பிரச்சினை பெரிதாகிக் கொண்டே சென்றது.

சாப்பிடும் தட்டை நங்..என வைக்கிறாள்...விக்கல் எடுத்தால் முகத்தை திருப்பி வைத்துக் கொள்கிறாள்.

இதைப் பார்த்த என்மகளும் அவளோடு ஒட்டிக்கொண்டாள்...

கூட்டணி இல்லாத கட்சி போல தனித்து விடப்பட்டேன்..

புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வரவில்லை...எப்பொழுது தூங்கினேன் தெரியவில்லை.

திறந்திருந்த ஜன்னல் வழியே ஊர் குருவிகளின் க்ரிச்..குரிச்..க்ரிச்..கீச்... கூச்சல் சப்தம்.

விடிந்த காலை நேரத்தின் வெளிச்சமும் சேர்ந்து என்னை எழுப்பியது.

மெல்ல எட்டிப் பார்தேன் ஜன்னலின் கீழேதான் சப்தம்.
நான் கண்ட காட்சி ஆச்சர்யமும் சற்று அதிர்ச்சியையும் கொடுத்தது.

ஒரு மைனா தரையில் மல்லாந்து கிடக்கிறது எழ முயற்சிக்கிறது.

அதை விடாமல் சினிமா வில்லனைப் போல் ஒரு காலால் மிதித்த படி இன்னொரு மைனா ஆக்ரோசமாக கொத்தி தாக்கிக் கொண்டிருந்தது.

வில்லனா...? கதாநாயகனா...?

அருகில் இன்னொரு மைனா இரு இறக்கைகளையும் விரித்தபடி தடுக்க முயற்சிக்கிறது. [ மே பீ கேர்ல் பேர்ட் ]

அதை சுற்றிலும் ஊர் குருவிகள் குதித்து குதித்து கத்தியபடி க்ரிச்...குரிச்..க்ரிச்..கீச்... இவையும் வேண்டாம் சண்டை என தடுக்க முயற்சிக்கின்றன.

சமையல் அறையில் இருந்த மனைவியை; ஓசைப்படுத்தாமல் சைகைசெய்தபடியே அவளின் கையை பிடித்து அழைத்து வந்தேன்.

உஷ் ..உதட்டின் மேல் விரல் வைத்தபடி.. பார்க்க சைகை செய்தேன். என் காதின் அருகில் சன்னமாக " பாவங்க.." என்றாள்.

ஹேய்... சட்டென அணைத்தும் பறந்தன.

கீழே கிடந்த மைனா சுதாரித்து எழுந்து பறந்தது. வில்லன் மறுபடி தாக்கப் பறந்தது. எல்லாம் ஜாகையை மாற்றிக் கொண்டன.

எனக்கு புரிந்துவிட்டது. இது பறவைகளின் காதல் சண்டை.

அதுவும் தன் காதலில் தோற்ற பறவை மற்றதை இப்படி பழி வாங்கப் புறப்படுமா?...எனக்கு ஆச்சர்யம் தான்.

இருக்கலாம்...பறவைகளுக்குள்ளும் நம்மளைப் போல் பல வித உணர்வுகள் இருக்கிறது இல்லையா..?

கோழிச்சண்டை பார்த்திருக்கிறேன் ஆனால் மைனாக்கள் சண்டை எனக்கு புதிது தான்.

காலையில் பேப்பர் வந்தது. படிக்க கண்ணாடி தேடினேன். டி.வி. விளம்பரத்தில் வருவதைப்போல் மணக்க மணக்க காஃபி கொண்டுவந்தாள்.

" ம்..ம்.." எடுத்துக்கங்க ஜாடை.

லீவு போட்டரேன்...நிச்சயத்திற்கு போலாம். சொல்லி விட்டு
நிமிர்ந்து பார்க்கிறேன். அவள் முகம் மலர்ச்சியில் ;

...மைனாக்களின் சண்டை நம்ம சண்டைக்கு எண்ட் கார்ட் போட்டுருச்சே..!

-------------------------------------------------------------------------------------------------------
இக்கதை புரட்சி FM (இணைய வானொலி)யில் ஒலிபரப்பப்பட்டது.
நன்றி ;இனியவை கூறல்

எழுதியவர் : கே இனியவன் (3-Sep-13, 8:34 pm)
பார்வை : 238

சிறந்த கவிதைகள்

மேலே