எதார்த்தவாதி வெகுசனவிரோதி
புரியாத குறியீடுகளால்
கவி சமைத்தால்
பூரித்துப் போகிறாய்....!
அலங்காரமின்றி
உன்முன்னே வந்தால்
ஆவேசம் கொள்கிறாய்...!
உண்மைகளுக்கு
அலங்காரமெதற்கு
என்றுரைத்தால்
உதாசீனம் செய்கிறாய்...!
முலாமிடும் பொய்களால்
உனை மறந்து
உயரத்தில் பறக்கிறாய் ...!
வெல்லத்தில் குளிப்பாட்டி
வாய்மை மருந்தளித்தால்
வேப்பங்காய் போல்
தட்டி வீசுகிறாய் .........!
மஞ்சள் குளிகுளித்து
பகலவனுக்காய் காத்திருக்க
நானொன்றும் சூரியகாந்தியல்ல
என்றுரைத்தால் பதிலின்றி
விலகிப் போகிறாய் ....!
பார்வைகளுக்காய் காதலையும்
பாசத்துக்காய் நட்பையும்
பாகுபாடின்றி நான் வடித்தால்
யோசிக்காமல்
பாசாங்கு என்கிறாய் ....!
எப்போதும்
ஆடம்பரமற்ற
எதார்த்தவாதியாய்
நானிருப்பதால்
எல்லையற்ற
பாரபட்சம் காட்டுகிறாய்...!!
----------------------------------------------------------------------தோழி துர்க்கா