நானும் ஒரு நடிகன்!
திறந்திருக்கும் திரையினிலே
விரிந்துவரும் ஒளியினிலே
எழுந்துவரும் நட்சத்திரநடிகனல்ல...
ஏமாற்றும் வழியெல்லாம் ஏமாற்றி
ஏகாந்தமாயிருந்து சுகம்காணும்
எட்டாதநிலை நிற்கும் நடிகனல்ல...
ஆனாலும் நானும் ஒரு நடிகன்,
ஆடாது ஆடிவரும் நடிகன்,
புவிமீது புகழாத நடிகன்,
புகழ்மீது புரளாத நடிகன்!
தாய்க்கு மகனாய் மகிழ்ந்திருப்பேன் - கூடவே
சேயிக்கு தந்தையாகவும் இருப்பேன்!
தங்கைக்கு அண்ணனாய் அருகிருப்பேன் - கட்டிய
மங்கைக்கு மன்னனாய் மாறிநிற்பேன்!
இப்படியாய் இருக்கின்றேன் நடிக்கின்றேன்...
சண்டையிடும் நேரத்தில்
சக நண்பன் வந்துவிட்டால்-
சரளமாய் சிரித்தழைப்பேன்
சற்றுநேரம் சண்டையினை மறைத்துவிட்டு...
மகிழ்வலையில் துள்ளும்போது
மற்ற நண்பன் கடன்கேட்டால் - முகம் மாற்றி
பணகஷ்டம்,மனகஷ்டம் பலநாள் என்பேன்!
பக்கத்தில் குடியிருப்போர்
பலபொருட்கள் வாங்கிவந்தால்-
பற்றிஎரியும் உள்ளம்மறைத்து - அப்பொருளை
பலவிதமாய் புகழ்ந்துரைப்பேன்!
இப்படியாய் நடிக்கின்றேன் ...
வித்தியாச வேடங்களில் -
விருப்பமில்லா காலங்களில் -
இதுபோல குணம்கொண்டு
இதுபோல வேடமிட்டு
அத்தியாவசியமாய் நடிக்கின்றேன்!
வாழும்வரை வாழ்க்கையில்
நானும் ஒரு நடிகன்!