கற்பனைக் காதலி

கற்பனைக் காதலி

துயரமும் தொல்லையும் துளைத்திடும் நெஞ்சில்
தொடர்ந்திடும் காதல் தோல்வியு மிருந்தால்
உயர்ந்தநல் எண்ணங்கள் ஊற்றாய்ப் பெருக
உருவாகிடு மோர் கவிதைச் சோலை.

கற்பனை போதும் நெஞ்சம் கனத்திட
கவிநயந் தோன்றி மெல்ல வளர்ந்திடும்
சொற்களும் என்னைத் தாக்க வந்திடும்
சொல்லும் விதந்தான் சுவை கூட்டாது.

சுவைபடக் கவிதை எழுதிட வேண்டில்
சிந்தையில் காதலி ஒருத்தியும் வேண்டும்
சுவைதரும் காதலில் தோல்வியு மிருந்தால்
செழித்திடும் கவிதை இளங்கதிர் போல.

ஊக்கந் தருமென் கற்பனைக் காதலி
உலகோர் பார்வை உணர்ந்திடக் காணாள்
ஏக்கந் தந்தென் எழுத்தில் குடிபுக
என்றினி வருவாள் அறியாய் நெஞ்சே!


11-11-80 செவ்வாய் இரவு 7.30

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (19-Oct-13, 11:55 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 134

மேலே