கவிதைக்குள் ஒரு க(வி)தை..

எத்தனை எதிர்பார்ப்பு
எத்தனை ஏக்கம்
அத்தனையும் அலை பாய
இரவின் மடியில்
அமைதியாய் கண்மூட
சடுதியாய் ஓர் சத்தம்
விழிகள் அகண்டு விரிய
இதயம் மீண்டும் துடிக்க
அருகில் நீ.....

பார்வையை பரிசளிக்க
பரீட்சையை காணும் மாணவி
போல் என் தடுமாற்றம்
இதமான உன் குரலில்
உயிர் பிழைக்க
இரட்டிப்பு மகிழ்ச்சியில்
இதயம் துடிக்க உன்
விரல்களால் தலை கோதி
என் விரகம் தணிக்கிறாய்..

இப்படியே நீளட்டும்
இந்த இரவு மட்டும் என
இதயம் ஏங்க
சூரியன் நக்கலாய் எழுந்து
வானில் நர்த்தனமாடுகிறான்...
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..
எதிரில் எனக்கான உன்
பொருட்கள் எனையே நோக்க
இடையில் நம் திருமண படம்
ஒருகணம் மெய் மறக்கிறேன்
நம் ஜோடி பொருத்தத்தில்...

மீண்டும் நடக்கிறேன்
அடுத்த வேலையை நோக்கி
ஒருபுறம் சமையல் முடிய
மறுபுறம் சங்கீதம் ஒலிக்க நம்
முதலாவது திருமண நினைவு
நாள் பரிசாக நீ தந்த அந்த
அழகிய நீல நிற சாரியை நான்
அயன் செய்து உடுத்த
அடுத்த கணம் உன் பார்வை
பவ்யமாய் வர்ணிக்கிறது
முந்தானை வெட்கப்பட
முத்த மழை பொழிந்தபடி..

அவசரமாய் இருவரும்
அவரவர் இடம் நோக்கி
ஓடுகிறோம்..அழகான
நினைவுகளை ஆழ்மனதில்
சுமந்தபடி...என் அத்தனை
பிரார்த்தனைகளும் உன்னால்
உயிர் பெற என் அடுத்த
பிரார்த்தனை இறப்பில்
கூட இருவரும் சேர்ந்தே
வாழ வேண்டும் என்பதே...

உச்சி குளிர்ந்தபடி உன்
ஞாபகங்களுடன் நான்
உறக்கத்தில் என்பதை மறந்து...
ஏதோ ஓர் சத்தம் எனை
ஏளனமாய் எழுப்ப
திடீரென கண்விழிக்கிறேன்.
இருட்டில் நான் மட்டும்..
நம் குழந்தையுடன்...

கண்ட காட்சி எல்லாம்
கனவாக மறைய
நினைவுகளின் ஈரம்
விழிகளை நனைக்க
இதயத்து ஓலம்
மூச்சை பதம் பார்க்க
இதழ் விழுங்கிய படி
திரும்பி பார்க்கிறேன்..
ஆணி அறைந்த சுவரில்
மாலையுடன் உன் படம்
என் சித்தம் கலங்க மீண்டும்
நீ என்னிடம் கனவுகளாகவே...

எழுதியவர் : மாலினி (20-Oct-13, 5:24 pm)
பார்வை : 86

மேலே