கவிஞனின் பயணம்

மனிதனுக்குள் ஒருவனாக
பூமியிலே பிறக்கிறான் !
தாய்மொழி குழைத்த பால் குடித்து
தானும் இங்கே வளர்கிறான் !
கற்பனையின் இறக்கை கட்டி
எங்கெங்கோ பறக்கிறான் !
கண் காணா தேசமெல்லாம்
கால் பதித்து பார்க்கிறான் !
வானவில்லை கையிலேந்தி
வானத்திலே திரிகிறான் !
நிலாப்பெண்ணை நினைவிலேந்தி
உலாவொன்று வருகிறான் !
கடல் அலைகள் கால்கள் தொட
அதையும் கவிதை என்கிறான் !
காதலியின் கரங்கள் பிடித்து
அழகுப் பூக்கள் என்கிறான் !
சமூகத்தின் அவலம் கண்டு
எழுத்தில் நியாயம் கேட்கிறான் !
கண்ணீரற்ற அழுகையினால்
காகிதங்கள் நிறைக்கிறான் !
தாய்மையின் உணர்வுகளை
தனக்குள்ளும் சுமக்கிறான் !
கவிதையாம் பிள்ளைகளை
தரணிக்காக வளர்க்கிறான் !
ஊருக்காக கவிதையெழுதி
உள்ளம் பூரிக்கிறான் !
ஊர் உறங்கும் வேளையிலும்
உணர்வுகொண்டு விழிக்கிறான் !
மனதில் வந்த ஊனத்திற்கு
மருந்தொன்று அளிக்கிறான் !
மலரினது மௌனத்திற்கும்
காதல்கொண்டு துடிக்கிறான் !
பெருமை கண்டு பெருமிதங்கள்
கொள்ளாதவனாய் இருக்கிறான் !
சிறுமை கண்டு பொறுமைகொண்டு
சிரித்துக்கொண்டே மறக்கிறான் !
வாழ்த்துக்களின் ஏணி கொண்டு
உயரம் ஏறி மகிழ்கிறான் !
வானத்திலும் பாதை அமைத்து
ஒய்யாரமாய் நடக்கிறான் !
இருபதின் இளமையோடு
அறுபதிலும் வாழ்கிறான் !
இன்பதுன்பம் இரண்டினையும்
ஒன்றை போலப் பார்க்கிறான் !
உயிரைவிட்ட உடலாய்
இந்தப் பூமியிலே புதைகிறான் !
புதைந்த பின்னும் இப்புவியிலே
இன்பக் கவிதைகளாய் வாழ்கிறான் !