பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோம்

பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோம்
--பேரண்டம் செழிக்கப் பெருங் கூத்திடுவோம்
உண்மை உலகில் இன்றும் இருப்பது
--உன்னதப் பிறப்புகள் பெண்டீர்களாலே
விண்ணை ஆண்ட வீரனாயினும் அவனுக்கு
--வீரம் தந்தது அன்னையின் பாலே
பண்ணுக்கு நிகராய் இன்பம் கூடுமாயின்
--பாரில் அதுவும் பெண் மக்களாலே

திண்ண முடையதாய் பாரதம் வளரும்
--தித்திக்கும் இவர்களின் முத்தமி ழாலே
வண்ண மேவிடும் வாழ்வும் வளமும்
--வளரும் இந்தக் குலமக்க ளாலே
எண்ணத்திலே பெண்களின் கல்வியை ஏற்றி
--ஏற்றமுடைய பாரதம் அமைப்போம் வாரீர்
மண்ணினில் பாரதம் மகளிர்க் கிங்கு
--மதிப்பினைத் தருமெனச் சொல்லிட வாரீர் !!

பூதப் பேய்களும் நம்மிடம் வந்து
--பூச்சாண்டி காட்ட அஞ்சி நடுங்குதுவே
சாதலும் குறைந்து மானுடர் வாழ்வில்
--சாதித்திடும் வேளையும் வருதே ! பெண்ணால்
காதல் வளருமாம் காதலினாலே
--கவலை போகுமாம் இது பாரதி வாக்கு
ஆதலினால் தான் பெண்மைக்காக
--அதரவு திரட்டி கும்மி யடித்தேன் பாரீர்

அகிலம் செழிக்கும் பெண்மையி னாலே
--ஆன்ற புலமையும் வளர்ந்திடும்
முகில னைத்தும் பெண் தானோ ?
--பொழிகிறது முப்போகக் கண்ணீர்
சகித்திடும் குணமும் தூய நல்அகமும்
--சேர்ந்தது தானிங்கு பெண்மை என்போம்
புகுதிடுவோம் ! அவர்களுகுக் கல்வி
--தொகுதிடுவோம் நற்அரண்களையெல்லாம்

கடல் கடத்தல் கூடாது பெண்கள் என்றார்
--கண்ட மூடத் தனத்தினை நம்புபவர்
மடந்தைகள் கடல்களின் அரசிகள் தான்
--மண்ணும் பொன்னும் அவர்க ளுரிமை
கடவுளில் பாசமும் வீர மிக்காள்
--காளி பராசக்தி மேல் ஆணை உரைப்பேன்
நடந்திடும் நன்மைகள் யாவையுமே
--நற்பெண்மை இனத்தினைச் சாறுமய்யா

நடக்கப் போகும் தீமைகளும்
--நங்கைகள் நினைத்தால் தடுத்திடலாம்
விடத்துக்கும் மருந்து இவர்களிடத்தே
--விளைந்திடும் இதனைக் கேளுமய்யா
உடலினைத் தாண்டி பெண்ணுக்குள் நல்ல
--உணர்வுகள் உண்டு பாருங்கள் அய்யா !
முடக்குதல் பெண்களை எளிதல்ல வெறும்
--மூடச் சத்திரம் ஒன்று கொண்டு

தமிழுடன்
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Dec-13, 6:20 pm)
பார்வை : 251

மேலே