அகம் பொங்கி வழியட்டும்

புத்தாண்டு
பிறந்துவிட்டது.....
உனக்குள்
நம்பிக்கை
நாற்றுகளை நடவு செய்துகொள்....

உன் பாதம் படும் இடமெல்லாம்
பூக்களை பிரசவிக்க
காத்துக்கிடக்கிறது
பூமி பந்து.......

கவலை வலைகளை
கிழித்து எறிந்துவிடு....
காற்று வெலிஎங்கும்
உன் கைகள் நீளட்டும்.....

நீ தொட்டதெல்லாம்
வெற்றியாக்க
உன் வியர்வைத்துளிகள் சிந்து.....

மானுட வரலாற்றில் மகுடம் நீ!
புகழ்ச்சி என்னும் மந்திர மகுடிக்கு
அசைந்து விடாதே
அது உன்
அஸ்திவாரத்தையே தகர்க்கும்
அணுகுண்டு......

மனிதர்களை வாசி
மனிதத்தை நேசி
பசி என்னும் பிணி போக்க
உழைப்பென்னும் அஸ்திரத்தை சுழற்று.....

இழப்புகளை எண்ணி வருந்தி
உன் அருந்தவக் கனவை
அழித்துவிடாதே....

உன் கண்ணுக்குள்
எரிமலை கங்கு
நீ இமை திறந்தால்
சூரியனும் பொசுங்கும்...

இனிய தோழனே!
சரித்திரத்தை மாற்றி எழுதிய பலபேர்
தரித்திரத்தில் பிறந்தவர்கள் தான்....

இனிய தோழியே!
வெறும் பூக்கோலம்
போடுவதர்க்கல்ல உன் பூவிரல்கள்
பூகோளத்தையே புரட்டிப் போட......

அன்பென்னும் ஊற்று
உன் அகம் பொங்கி வழியட்டும்
ஆனந்த தூறல்
அண்டமெல்லாம் பொழியட்டும்..

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (2-Jan-14, 5:15 pm)
பார்வை : 166

மேலே