போத்தலை_ நிறைவுப் பகுதி

அவனை நோக்கி நான் ஓடி வந்தேன். நான் அருகில் வந்ததும், ஏதோ ஒரு புதையலைத் திறப்பது போல, என்னைப் பார்த்து சிரித்தபடி, இடுப்பு பர்ஸில் இருந்து கைநிறைய தேன் மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தான்.
அடுத்தநாள் ஞாயிறு. போத்தலை காலையிலேயே வந்து விட்டான். பாதித் தூக்கத்தில் கண்களை கசக்கிக்கொண்டே வெளியே வந்தேன். அம்மாவும் போத்தலையும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். “அவன் அப்பா வந்திருக்காரு. அவன் எங்கேயும் வெளியே வரமாட்டான். அடுத்த தடவை பாத்துக்கலாம்” என்று அம்மா கண்டிப்பாகக் கூறினாலும், போத்தலை பிடிவாதமாக “இன்னைக்கு ராத்திரி ஊரிலே திருவிழாம்மா. கரகமெல்லாம் இருக்கு. தம்பியை அனுப்பினா, நாளைக்கு காலையிலேயே கொண்டு வந்து விட்டுடறேன் அம்மா” என்று கெஞ்சினான். அப்பாதான் வெளியே வந்து அம்மாவை சமாதானப் படுத்தி போத்தலையுடன் என்னை அனுப்பி வைக்க சம்மதித்தார். நான் குளித்து சாப்பிட்டு முடியும் வரைக்கும் திண்ணையிலேயே காத்துக் கொண்டிருந்தான் போத்தலை. திங்கள் கிழமை நடக்கப் போகும் மாதாந்திரத் தமிழ்த் தேர்விற்காக தமிழ் புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். என்னைக் கண்டவுடன் ஒரே மூச்சில் என்னை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றி வண்டியில் அவனுக்கருகில் உட்காரவைத்தான். கோமதியைப்பார்த்து ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். புரிந்தது போல கோமதியும் அடிக்கடி தலையை ஆட்டிக் கொண்டே இருந்தது. அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, நாட்டு ஓடு போட்ட ஒரு வீட்டிற்கு முன்பு வண்டி நின்றது. வண்டியிலிருந்து குதிக்கப் போன என்னை, மீண்டும் ஒரு தடவை தூக்கி தட்டாமலை சுற்றி கீழை இறக்கினான். எங்களைக் கண்டவுடன், அவனின் மகன் ஐய்யனார் தன் இரண்டு கைகளில் இருக்கும் தண்ணீர் நிறைந்த தகர டப்பாவை கீழை வைத்துவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான். அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். அரைக் கை பனியன் அணிந்திருந்தான். இடது தோள் பட்டையில் தையல் விட்டிருந்தது. அதை வலது கையால் அடிக்கடி மேலே இழுத்து விட்டுக்கொண்டான். எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததைப் பார்த்த போத்தலை “ஏண்டா, இப்படி டின்னை தடால்னு வைச்சே. எவ்வளவு தண்ணி சுத்தியிலும் சிந்தி இருக்கு பாரு” என்று கூறிக்கொண்டே தண்ணீரை வீட்டிற்கு முன் இருக்கும் பெரிய சிமெண்ட் தொட்டியில் ஊற்றினான். ஐய்யனார் என்னைப் பார்த்தவுடன், என் கைகளைப் பிடித்துக்கொண்டே “அப்பா உன்னைப் பத்தி சொன்னாரு. என்னா கிளாஸ் படிக்கிறே?’ என்று கேட்க அஞ்சாம் வகுப்பு என்று கூற, என் கைகளில் இருக்கும் தமிழ் புத்தகத்தை வாங்கி வேகமாகப் புரட்டிப் பார்த்தான். வீட்டுக் கூடத்தில் இருக்கும் தூணின் மேல் ஒளித்து வைத்த ஒரு நோட்டை எடுத்து என் கைகளில் திணித்தான். “எனக்கு எழுதக் கத்துக் கொடுக்கிறீயா?” என்று கண்களில் ஆவலைத் தேக்கிக் கேட்க சரி என்று ஒரு பக்கம் முழுவதும் நிறைத்து பெரிதாக “அ” என்று அவன் கொடுத்த விரலளவு முனுக்கிப் பென்சிலால் எழுதினேன். அதை ஆவலுடன் பார்த்தவன், போத்தலையைக் கண்டவுடன் அந்த நோட்டை மறுபடியும் அதே தூணிற்கு மேல் அவசரமாக ஒளித்து வைத்தான். என் கைகளைப் பிடித்து அருகில் இருக்கும் தோப்பிற்கு கூட்டிக்கொண்டு போனான். இளநீர் பறித்துத் தரச் சொன்னான். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்க்கச் சொன்னான். சில இலைகளை மென்று துப்பச் சொன்னான். நேரம் பேனதே தெரியாமல் தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

அன்று மாலை திருவிழா முடிந்து வீட்டிற்கு வர நீண்ட நேரம் ஆனது. வெந்தயக் களியில் குழி செய்து வழிய வழிய நல்லெண்ணை விட்டு கொஞ்சம் வெல்லமும் வைத்திருந்தார்கள். ஐய்யனார்தான் எப்படி சாப்பிடுவது என்று விளக்கம் கொடுத்தான். முதலில் கொஞ்சம் களி உருண்டை எடுத்து நல்லெண்ணையில் ஒற்றி எடுத்து பிறகு அந்த உருண்டையின் வடிவம் மாறாமல் மெதுவாக வெல்லத்தில் தொட்டுப்ப்புரட்டி வாயில் போட்டுக் கொண்டு, நான் செய்வதை உன்னிப்பாகக் கவனித்தான். இரவு அதிக நேரம் என் நண்பர்கள், வகுப்பு ஆசிரியர், பள்ளிக்கூடம் பற்றி ஐய்யனார் அதிக ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தான். வெகு நேரம் கழித்துத்தான் இருவரும் தூங்கினோம்

திருவிழாவிற்கு போய் இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வாரமாக போத்தலை தண்ணீர் கொண்டு வரவே இல்லை. விசாரித்துப் பார்த்ததில் போத்தலை குடும்பத்துடன் கிராமத்திற்கு போய்விட்டதாகவும் வீடு பூட்டி இருந்ததாகவும் பார்த்தவர்கள் சொன்னார்கள். பாட்டிதான் புலம்பிக்கொண்டே இருந்தாள். ஒரிரு நாள் வரமுடியவில்லை என்றாலும், போத்தலை பாட்டியிடம் முன்பே கூறிவிட்டுத்தான் போவான். ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பாட்டியும் நானும் திண்ணையில் உட்கார்ந்து தாயம் ஆடிக்கொண்டு இருக்கும் போது, மணியின் சத்தம் கேட்டது. போத்தலையின் வண்டிதான். ஆனால் போத்தலை வண்டியில் இல்லை. தெரு முனை வீட்டிலிருந்து வண்டி எங்கள் வீட்டை நோக்கி வந்தது. ஐய்யனார்தான் உட்கார்ந்திருந்தான். என்னை பார்த்த உடனே கீழே இறங்கி வந்தவன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அப்பா இறந்து விட்டதாகக் கூறினான். எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக் காத்திருந்த கண்ணீர்த் துளிகளுடன் அழுகையை அடக்க முயன்று தோற்றுப் போனான். பாட்டிதான் அவனுக்கு ஆறுதல் கூறினாள். நாளையில் இருந்து பதிவாக வருவதாகக் கூறி மறுபடியும் வண்டியில் ஏறிக்கொண்டான். சிறிது தூரம் சென்றவுடன் ஐய்யானார் வண்டியை நிறுத்திவிட்டு பீப்பாயின் ஓரத்தில் சொருகி வைத்த நோட்டை எடுத்துக் கொண்டு என்னைப் நோக்கி ஓடிவந்தான். அவன் கொடுத்த நோட்டுப் புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் நிறைந்திருந்தது நான் கற்றுக் கொடுத்து அவன் எழுதிய “அ” என்ற உயிர் எழுத்து. “நாளையிலிருந்து போத்தலை வந்திடுவானாம்” என்று பாட்டி கூடத்தில் வேலையாய் இருக்கும் அம்மாவிற்குக் கேட்குமாறு திண்ணையிலிருந்து கொண்டு உரக்கக் கூறியது ஐயனாருக்கும் கேட்டிருக்கவேண்டும். என்னைப் பார்த்து சிரித்தபடி வண்டியில் ஏறிக்கொண்டு கைகளை ஆட்டினான்.

எழுதியவர் : பிரேம பிரபா (9-Jan-14, 11:49 am)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 89

மேலே