இறப்பு தேடி வந்தவர்கள்

பிழைப்பு தேடி
வந்தவர்களென்று நினைத்தோம்!
இல்லை
நாங்கள்
இறப்பு தேடி வந்தவர்கள்!
அயலூர்க்காரர்கள் நாங்கள்
எனவே தான்
அயராமல் உழைக்கிறோம் !
பத்து ரூபாய்
அதிகம் கிடைக்குமென்றால்
பட்டினி கிடந்தாவது
அவ்வேலையை முடிப்போம்!
இரவு பகல்
எங்களுக்கு கிடையாது !
நல்லது கெட்டது
எங்களுக்குப் புரியாது !
வாய் நிறைய பாக்கிருக்கும்
மதியநேரம் வந்தால்
அதுவே எங்கள் பசி போக்கும் !
அந்தரத்தில் வேலை
ஆயிரமடி பள்ளத்திலும் வேலை
எங்கிருந்தாலும்
போய் உழைப்போம் !
சில நேரங்களில்
எங்களின் உயிரைக்கூட கொடுப்போம் !
எந்திரத்தில் கோளாறு என்பார்கள்
ஏதேதோ காரணம் என்பார்கள் ...
எங்களுக்குள்
ஒரே ஒரு
கேள்வி மட்டும் தான் எழும் !
எந்திரத்தில் கோளாறா?
இல்லை
எந்திரம் வாங்கியவன்
கோளாறா?? என்று
விடை ஏதும் தெரியாது !
விடியும் வரை
கலங்கி இருப்போம் !
விடிந்த பின்
விஷயம் மறப்போம் !
இதுவே வாடிக்கையானது !
எங்கள் வாழ்வே வேடிக்கையானது!
நாங்கள்
பிழைப்பு தேடி
வந்தவர்களென்று நினைத்தோம்!
இல்லை
நாங்கள்
இறப்பு தேடி வந்தவர்கள்!
(11.1.2014 சென்னை மெட்ரோ ரயில் விபத்தில் இறந்து போன தொழிலாளியை நினைத்து எழுதியது )