கவிஞர்கள் நாம் காலத்தை வென்றிடுவோம்
பச்சை கம்பளத்தில் சிதறிய முத்துக்கள்
பசுமை தடாகத்தில் அழகிய அன்னங்கள் !
கூடியே இரைதேடும் இனத்தின் ஒற்றுமை
கூட்டம் போடுவதிலும் நம்மில் வேற்றுமை !
ஐந்தறிவு பறவைகளின் ஐக்கியமே காட்சி
ஆறறிவு மனிதனுக்கு இதுவன்றோ சாட்சி !
பறவைகள் பாடுகிறது ஒருமைப் பாட்டை
பாடமாய் சொல்கிறது நிலைப் பாட்டை !
காணும் விழிகள் வியப்பால் விரிகின்றன
நாணும் மனிதனோ மாறிட மறுக்கின்றான் !
இனத்தில் வேறுபாடு மனத்தில் மாறுபாடு
இன்றைய மக்களின் மாறாத நிலைப்பாடு !
என்றுதான் இதயங்கள் இணைந்திடுமோ இங்கு
அன்றுதான் இன்பமும் மலர்ந்திடும் இங்கே !
தரணியில் மட்டுமல்ல தளத்திலும் மாறிடுக
பரணியும் பாடிடுவோம் பரந்த மனதுடனே !
கவிதைகள் படைத்து கவியுகம் காண்போம்
கவிஞர்கள் நாம் காலத்தை வென்றிடுவோம் !
பழனி குமார்