மந்திர பானை

மலை அடிவாரத்தில் ஒரு சிறுவனின் வீடு இருந்தது. அவன் அங்கு அம்மாவுடன் வசித்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை. அவனது அப்பா உயிருடன் இருந்த போது, அவருக்கு நிறைய சொத்து இருந்தது. அவர் இறந்தவுடன் அந்தச் சொத்தை எல்லாம் மலையின் உச்சியில் இருந்த உறவினர் ஒருவர் அவர்களை ஏமாற்றி எடுத்துக் கொண்டார். அவர்களிடம் ஒரு "பசு" மாடு மட்டும் இருந்தது.

வறுமையின் பிடியில் இருந்த அவர்கள் இருவரும் அன்றாட வாழ்க்கைக்கான உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தங்களிடமிருக்கும் பசுவையும் விற்றுவிடுவது என முடிவு செய்தனர்.

அதன்படி மகன் அந்தப் பசுவை விற்பதற்காகப் பக்கத்திலிருந்த நகரத்துக்குக் கொண்டு சென்றான்.

அவன் செல்கிற வழியில் ஒரு மனிதனைச் சந்தித்தான். அவன் துணியால் மூடிய ஒரு பொருளை வைத்திருந்தான்.

அவன் சிறுவனிடம், “சிறுவனே, எங்கே போகிறாய்?” என்று கேட்டான்.

சிறுவனும் பசுவை விற்கப் போய்க் கொண்டிருப்பதாகத் தெரிவித்தான்.

அவன், “அப்படியானால், இந்தப் பசுவை என்னிடம் விற்கிறாயா?” என்று கேட்டான்.

சிறுவனும், “பசுவுக்கு என்ன விலை தருவீர்கள்?” என்று கேட்டான்.

“நான் என்னிடமிருக்கும் பானையை உனக்குத் தருகிறேன். அதற்குப் பதிலாக பசுவை என்னிடம் கொடு” என்றான் அவன்.

“பசுவிற்குப் பதில் பானையா? என்னால் தர முடியாது” என்று மறுத்தான்.

அப்போது பானைக்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் சிறுவனுக்குக் கேட்டது, "என்னை வாங்கிக்க, என்னை வாங்கிக்க,"என்று பானையில் இருந்து குரல் மெதுவாக வந்தது.

இதைக் கேட்ட அவனுக்கு ஆச்சரியமாகிப் போனது.

பானையை வாங்கிக் கொண்டு பசுவை அவனிடம் கொடுத்தான்.

அங்கிருந்து வீடு திரும்பினான்.

பசுவை விற்று விட்டு பானையுடன் வீடு திரும்பிய மகனைக் கண்ட அம்மா, “பசுவை என்ன விலைக்கு விற்றாய்? “ என்று கேட்டாள்.

அந்தச் சிறுவன் தாயிடம், அந்தப் பசுமாட்டைக் கொடுத்து இந்தப் பானையை வாங்கி வந்திருப்பதாகத் தெரிவித்தான்.

“உன்னை எவனோ ஒருவன் நன்றாக ஏமாற்றி விட்டான். ஒரு பசு மாட்டிற்கு ஈடாகப் பானையை யாராவது வாங்குவார்களா? உனக்கென்று சிறிது கூடவா அறிவில்லை” என்று சத்தம் போட்டார்.

சிறுவன் பேசாமல் நின்றிருந்தான்.

அவனது தாய் அவனிடமிருந்த பானையை வாங்கி கீழே போடப் போனார்.

அப்போது அந்தப் பானை, “என்னை அடுப்பில் வைத்துத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள்” என்றது.

பானை பேசியது கண்டு வியப்படைந்த அவள் பானை சொன்னபடி அடுப்பில் வைத்துத் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்தார்.

பானை அவர்களிடம், "இப்பொழுது, நான் போய் உங்களுக்கு சாப்பிடக் கொண்டு வருவேன்,"என்றது.

பானை அடிவாரத்திலிருந்து மலைய்ச்சிக்குப் பறந்து சென்றது.

அப்போது அந்தப் பணக்கார வீட்டுப் பெண்மணி தான் சமைத்த பலகாரங்களை வைக்கப் பாத்திரம் தேடிக் கொண்டிருந்தார்.

அங்கு புதிதாக இருந்த பானையைப் பார்த்த ஆச்சரியமடைந்த அவள் அந்தப் பானையிலேயே தான் சமைத்த பலகாரங்களைப் போட்டார்.

பின்னர் அந்தப் பானையை அங்கிருந்த மூடியைக் கொண்டு மூடினார்.

அவள் பணக்காரக் கணவரைச் சாப்பிட அழைக்கப் போனார்.

அந்த நேரத்தில் அந்தப் பானை அங்கிருந்து காற்றில் மிதந்தபடி மீண்டும் மலை அடிவாரத்திலிருந்த சிறுவன் வீட்டுக்கு வந்து விட்டது.

பானையிலிருந்த விதவிதமான பலகாரங்களைப் பார்த்த தாயும் மகனும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவைகளை உண்டு மகிழ்ந்தனர்.

அடுத்த நாள் காலையிலும் பானை, அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள் என்றது.

சிறுவனின் அம்மாவும் அதுபோல் செய்தார்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காற்றில் மிதந்தபடி பானை வெளியே சென்றது.

மலை உச்சியில் பணக்காரரின் ஆட்கள் கோதுமையை அறுவடை செய்து கொண்டிருந்தனர்.

கோதுமையைப் பிரித்து ஓரிடத்தில் குவியலாக வைத்திருந்தனர். அந்த இடத்திற்குப் போனது பானை. பானை அங்கு போனவுடன் தன் உருவத்தைப் பெரியதாக்கிக் கொண்டது.

அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் அந்தப் பானையிலேயே கோதுமையைக் கொட்டத் தொடங்கினர். அந்தப் பானை கொட்டப்பட்ட கோதுமை அனைத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டது.

அங்கிருந்த வேலையாட்கள் அங்கிருந்து நகர்ந்தனர். உடனே அந்தப் பானை காற்றில் மிதந்தபடி சிறுவனின் வீட்டிற்கு வந்து விட்டது.

சிறுவனின் அம்மா, பானையிலிருந்த கோதுமையை அங்கிருந்த தானியக் கிடங்கில் சேமித்தனர். அந்த வருடத்துக்குப் போதுமான கோதுமை அது.

மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.

சிறுவனின் அம்மா அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானை காற்றில் மிதந்து வெளியே போனது.

பணக்காரர் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து எண்ணிக் கொண்டிருந்தார். பானை அங்கே போய் இருந்து கொண்டது. மற்றொரு அறைக்குப் போய் அங்கிருந்த பணத்தை எல்லாம் எடுத்து வந்தார். இனி, இந்தப் பணத்தை எல்லாம் இந்தப் பானையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

அப்போதுதான் அந்தப் பானையைப் பார்த்தார் அவர்.

அடடே, இந்தப் பானையில் எல்லாப் பணத்தையும் வைக்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டார். தன் முன் இருந்த பணத்தை எல்லாம் அந்தப் பானைக்குள் எடுத்து அடுக்கினார். பணத்தை வைக்க வைக்க பானையில் காலி இடம் இருந்து கொண்டே இருந்தது. அவரிடமிருந்த எல்லாப் பணத்தையும் வைத்து விட்டார். அப்போதும் பானை காலியாகவே இருந்தது.

பணக்காரர் பானையை நிரப்ப நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பானை காற்றில் மிதந்து செல்ல ஆரம்பித்தது.

பணக்காரர் பானையைத் துரத்திக் கொண்டே ஓடினார். பானையினை அவரால் பிடிக்க முடியவில்லை.

பானை அங்கிருந்து சிறுவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

அந்தப் பானையில் பணம் இருந்ததைப் பார்த்த அந்தச் சிறுவனும், அவனது அம்மாவும் மகிழ்ச்சியடைந்தனர்.

மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கச் சொன்னது.

இனி மேல் எதற்கு? எங்களுக்குச் சேர வேண்டியது எல்லாம் கிடைத்து விட்டது. நீ,எங்கும் போக வேண்டாம். எங்களுடனேயே இருந்து விடு என்று சிறுவனின் அம்மா சொன்னார்.

"இனி நான் உங்களுக்குத் தேவையில்லை. உங்களை ஏமாற்றி மோசடி செய்தவருக்கு மேலும் ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன். எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்” என்றது பானை.

சிறுவனின் அம்மாவும் அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானை காற்றில் மிதந்து வெளியே போனது.

பணக்காரர் கண்ணில் படும்படியாக அந்தப் பானை போனது.

"என் பணத்தைத் திருடிக்கொண்டு போன பானை இதுதான்...! பிடியுங்கள்"என்று அந்தப் பணக்காரர் கத்தினார். பானையைப் பிடித்துக் கையை விட்டுப் பணத்தைத் தேடினார். பணம் எதுவும் அதிலில்லை. பணக்காரர் தன் தலையை உள்ளே நுழைத்துப் பணம் இருக்கிறதா என்று பார்த்தார். பணம் எதுவும் இல்லை.அவரால்,அவரது தலையையும் வெளியே எடுக்க முடியவில்லை.

பானை காற்றில் மிதந்து சென்றது. பணக்காரர் ஏதேதோ சொல்லிக் கத்தினார். வெளியே எதுவும் கேட்கவில்லை. அந்தப் பானை காடு,மலை,கடல் எல்லாம் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தது...

எழுதியவர் : முரளிதரன் (20-Feb-14, 11:59 am)
Tanglish : manthira paanai
பார்வை : 285

மேலே