யுத்தகளம்
யுத்தகளம் :
ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் :
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !