வீழ்விலும் எழுவர்

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தவிட்ட செய்தியறிந்து எழுதப்பட்ட கவிதை

ஆண்டுகள் இருபத் தொன்றை
ஆரியக் கொடுஞ்சி றைக்குள்
நீண்டதோர் கொடுமைக் காளாய்
நேர்ந்துமே நெஞ்சு டையா(து)
ஈண்டுள நயன்மை மன்றின்
இசைவுறு தீர்ப்பைப் பெற்று
மீண்டுள ஏழு பேரே!
வீழ்விலும் எழுவீர் நீரே!

கெடுதலை இயற்றி யோராய்க்
கீழினும் கீழோர் உம்மைத்
தடுத்திருட் சிறையி லிட்டுத்
தமிழரைத் துயரில் ஆழ்த்த
நடுநிலை அற்ற நாட்டில்
நயன்மைமேல் வைத்த பற்றால்
விடுதலை பெற்று வீர
விடியலாய்க் கிளர்ந்தெ ழுந்தீர்

தொண்டையில் தூண்டில் முள்போய்த்
துளைத்திடத் துடிது டிக்கும்
கெண்டையின் நிலையின் கீழாய்க்
கிடந்தஎம் மறவர் காள்!நீர்
பண்டுநாள் பழிக ளைந்து
பகலவன் போலெ ழுந்தீர்
நன்றுநீர் வாழ வேண்டி
நான்நலம் பாடு கின்றேன்.

எழுதியவர் : அகரம் அமுதன் (23-Feb-14, 10:48 am)
சேர்த்தது : அகரம் அமுதன்
பார்வை : 144

மேலே