கற்பனைக் கோட்டையின் மன்னன்

கற்பனை என்றொருகோட்டை - அங்கு
கால காலமாக வேட்டை
கொற்றவனாய் தினம் கூடும் - அந்தக்
கோல அரண்மனை மாடம்
பற்றுடனே பணியாற்றும் - பல
பாவைகளின் எண்ணக் கோலம்
வற்றும் நிலை யற்ற பொய்கை அது
வந்து சுற்றிக்காணும் வண்ணம்,

பொற்சுடர் மின்னி விளங்கும் - அதில்
பொய்களின் இராச்சியம் ஓங்கும்
விற்பனை மொத்த அறிவாம் - அங்கு
வீரிட்டழும் உண்மை தானும்
கற்குகை யாகினும் வாழும் - உள்ளம்
காணும் அரண்மனை வாசம்
புற்தரையிற் பனி மேவும் - அங்கு
போதையின் நித்திரை காணும்

கண்கள் கூசும் ஒளிவெள்ளம் - அங்கு
காற்றில் மிதக்கும் நல்வாசம்
கொண்டவர் மேனி சிலிர்க்கும் - மனம்
கொஞ்சிக் களித்திடு மின்பம்
வெண்ணிறப் பூக்கள் மலரும் - வந்து
வீழ்ந்தநட் சத்திரம் மின்னும்
எண்ணம் கிறங்கித் தவிக்கும் - அது
எங்கெல் லாமோ சென்று மீளும்

செண்டில் மலர் வண்டு ஆடும் - பக்கம்
சித்திரங்கள் நின்று பேசும்
தண்டினில் ஆடுந்தா மரை - மன
தாகமெழுங் கதிர்க் கண்கள்
மண்டல மெங்கணும் யாவும் - உன்
மாண்பு தனைப்பேசிப் போற்றும்
கண்டதெல்லாம் கையிற் கொள்ளும் - அந்தக்
கற்பனை சாத்தியமாகும்

தூவும் அடைமழை கூடும் - அது
சொட்டும் நீரையல்லப் பூவும்
தாவும் மரம் தொங்கியோடும் - அது
தானு மெந்தன் மனமாகும்
நீவி அலைத் தென்றல் சுட்டும் சில
நீல மலர்கெட்டு வீழும்
நாவிலிசை உயிர் கொள்ளும் அதில்
நர்த்தன மாடிடும் உள்ளம்

பேயின் கூச்ச லிடும் சத்தம் - அது
பிய்த்து வீசும் மன அச்சம்
நாயின்ஓ வென் றொரு ஓலம் - அந்த
நாழி கத்தும் இருட்கோட்டான்
தேயும் நிலவுடை தோற்றம் - கணம்
தேகம் உறைகின்ற கூச்சல்
மாயும் எண்ணங்களில் மாற்றம் - உடன்
மானிட வாழ்வின் மரணம்

தேவைகளின் வெறும் சூன்யம் - இனி
தேனில்லை வாடும்மென் பூக்கள்
சாவை அணைத்திடும் கண்ணில் - அது
சஞ்சல மற்றதோர் தூக்கம்
தேவியின் கூடும் தீவாசம் - மனம்
தீங்கில்லா என்றிடக் காணும்
ஓ,விளை யாட்டிவை யாவும் என்
உள்ளத்தின் கற்பனையாகும்.

எழுதியவர் : கிரிகாசன் (24-Feb-14, 7:36 am)
பார்வை : 71

மேலே