ஆண்டவனே தள்ளிப் போ

ஆண்பாதி பெண்பாதி
ஆகிநின்ற ஆண்டவனே
ஆணுமின்றிப் பெண்ணுமின்றி
அரையுருவம் படைத்ததென்ன ?
அம்பலத்துச் சபைதனிலே
ஆடுகின்ற கோமகனே
அளவற்ற துன்பத்தை
அள்ளியள்ளிக் கொடுத்த தென்ன ?
ஆணென்றும் பெண்ணென்றும்
அறுதியிட்டுக் கூறாமல்
அவசர கதியிலெம்மை
அனுப்பி வைத்து விட்டதென்ன ?
உண்டென்றோ இல்லையென்றோ
உணர்ந்து கொள்ள முடியாமல்
உள்ளுக்குள் எரிமலையை
உருவாக்கி விட்டதென்ன ?
எல்லோரும் முகம் சுளித்து
ஏளனம் செய்யும்படி
இரக்கமின்றி எம்மை நீ
இவ்வுலகில் விட்டதென்ன ?
ஆவேசம் கொண்டுவிட்டோம்
ஆண்டவனே உன்னிடத்தில்.
நீ சபித்து விட்டபடி
நிச்சயமாய் வாழ்வதில்லை.
எல்லோரும் இப்புவியில்
இயல்பாக வாழ்வதுபோல்
ஏற்றமுற வாழ்வதற்கு
இறுமாப்புக் கொண்டுவிட்டோம்.
உன்னால் முடியுமென்றால்
உதவி செய்யப் பக்கம் வா.
இல்லையென்று சொல்லிவிட்டால்
தள்ளிப் போ வெகு தூரம் !!