என் குளத்தில் கல்லெறிந்துவிட்டீர்கள்
என் குளம்
என்னை நீந்தச் செய்து
என்னை ரசித்துக் கொண்டிருந்தது.
காற்றினைக் கடத்தி வந்து
என் சட்டைக்குள் நுழைத்து
குளிரச்செய்தது.
என் கனவு மீன்கள்
நெளிந்து நெளிந்து
மௌனத்தில் புன்னகையைப் புதுப்பிக்கச் செய்தது.
என்னிடம் எழுதுகோல் கொடுத்து
கவியோவியத்தில்
வார்த்தை வண்ணங்கள் கொண்டு
அவனை பிரதிபளிக்கச் செய்ய வற்புறுத்தியது.
நானெண்ணவில்லை,
அந்த வற்புறுத்தல் வாழ்வின்
துணைவியாகும் என்று.
வாசிப்புகள்
என் குளத்து பசிக்கு
வெவ்வேறு மார்க்கத்திலிருந்து
வந்த நீர் போலானது.
நீர் மேல் நிற்கும் அல்லி தாமரை
கரை மேல் நிற்கும் மரங்கள்
வந்து போகும் பறப்பன போலாயின
என் நாட்கள்.
விதைக்கப்பட்டது என்றோயொரு நாளாயினும்
விருட்சமான இன்று கிடைத்த
என் குளம்
ஒதுக்கப்பட்ட புத்தகமானதால்
திறக்கப்படாமலே போனது.
நான் மட்டும் திறப்பதால் தான்
கவிதை வாசிக்க முடிகிறது.
இந்த
தனிமையாளன்
சமூகச் சிறைக்குள் இடறிய பொழுதுதான்
கற்கள் வீசப்பட்டன.
மாணவர் போர்வை
விலக்கப்பட்ட வேளையில்
விமர்சிக்கப்படுகின்றன
விலை கொடுத்து வாங்கப்பட்ட மதிப்பெண்கள்.
விமர்சிக்கப்பட்டவனின் விலாசம்
நாடியோ தேடியும்
வேலை, வந்தோ கிடைத்த பாடில்லை.
வியாபார சந்தைக்குள்
வாசித்தது வெற்றுச் சரக்கு
வடித்தது உணர்ச்சிச் சரக்கானது.
உள்ளத்து அமைதி சிறைப்பட்டு
குழப்பத்திற்குள் நாடு கடத்தப்பட்டது.
மழை பொய்த்து போக
நீர் வரத்தும் நின்றது.
நாளை நாட்டியத்தில்
இன்று இடறியது.
பதவிமேல் வாழ்வை ஏற்றிவிட்டு
பயிற்றுவித்தோர் ஏறென்கின்றனர்.
எறிந்த கல்
என் கனவைக் கலைத்து
என் குளத்தை அலங்கோலமாக்கிவிட்டு
அடி நோக்கி பயணப்பட்டு படிந்தது.
கல்லைக் கறைக்க திராவகமல்ல
என் கண்ணீர்.
நான் வாழாத என் வாழ்வின்
தனிமைக் குளத்தில்
கடைசியாக
யாரோ எறிந்தது நம்பிக்கை கல்.