நாணமில்லையோ
பொன்னிறம் கொண்ட
பெண்டிரைப் போல்
காலையிலே
கண் மலர்ந்து
அழகு முகத்தோடு
காத்து நின்று
வட்ட முகத்தழகன்
வரவு நோக்கி
வழிமேல் விழிவைத்து
அவன் தடம் பதிக்கும்
இடமெல்லாம்
உன் பார்வையை
பதிய வைத்தாய்.
அவனோ-உன்னைக்
காணாததுபோல்
கடந்து மறைய,
அந்தியிலே
உன் முகம்
வேதனை மேலிட
வாடிப்போகுதே.
பூவையருக்கு
நாணமுண்டு
சூரியகாந்தியே
உனக்கு மட்டும்
நாணமில்லையோ!