ரயில்வே ஸ்தானம்

ஒரு சிறிய கதை

வஸந்த காலம். காலை நேரம். தென்காசிஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கே இரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்திபெற்ற குற்றாலத்தருவி விழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம்மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல்திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும்.இரண்டு பக்கங்களிலும், செங்குத்தான மலைகளும், ஆழமானபள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச்செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப்புழைகளும் இருபாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து,சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும்பலவகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒரு முறை பார்த்தால்பிறகு எக்காலத்திலும் மறக்கமுடியாதன.

இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில்காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும்ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவிஅழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத்துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்னஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலேயிருந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்துநின்று கொண்டு, போவார் வருவோரை கடைக்கண்ணால்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர்கள் தலைப்பாகை, கோட்டு, கெடிகாரச் சங்கிலிசகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போல தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை. சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேன்குழல், சுகியன், காப்பி முதலியனவியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரமும்பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவதுகாசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு மடங்குவிலைவைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணிநேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிதுதூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக்கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலேமிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லீன் சட்டை. சரிகைக்கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்தமீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக்கண்ணீர் ஊற்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு மிகவும்பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை ஏன்அழுகிறாய் என்று கேட்டால், அதினின்றும் அவனுக்குஒரு வேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூடயோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னேபோய் நின்றுகொண்டு:- ''தம்பி, ஏன் அழுகிறாய்?''என்று கேட்டேன்.

அவன் என்னை ஏற இறங்க ஒருமுறைபார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான்.பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைந்துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனே அவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்தில அவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத ரூபமாகவேதென்பட்டது.

என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம்உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம்கொள்ளாமல் ''ரயில் எப்போது வரப்போகிறது?'' என்றுகேட்டான்.

''இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில்தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்'' என்றேன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்?

உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.

அதற்கு நான்:- ''சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று'' என்றேன்.

''காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?'' என்று அந்த முஸல்மான் கேட்டான்.

அதற்கு நான்:- ''ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாயராஜாக்கள் பாரசீக பாஷையிலே தான் பெரும்பாலும்ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டுஅவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்ததேசத்துப் பாஷையாகிய ஹிந்தியைப் பொது பாஷையாகக்கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள். எனக்கு ஹிந்தி தான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படிஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததேயாகுமாதலால் தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன்.

இது நிற்க. ''நீ வருத்தப்பட்டுக்கொண்டிருந்த காரணம் யாது?''என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன். இதுகேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்:-

''சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயேஎனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம்சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என்மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தைத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்தபுண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்து போகும்வரை மறக்க மாட்டேன்'' என்றான்.

''முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும்.தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்'' என்றேன்.

அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:

''எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார்,பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம். சிந்துமாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம்அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம். நான் என்பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதாமிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் "கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடையதரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லாதிருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்குவிழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சிலவருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என்பிதா நல்ல புத்திமான். நஷ்டம் வரத்தொடங்கிய மாத்திரத்திலேதிடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு,பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார். நான்பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளையாதலால் அவர் சொத்தெல்லாம்எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்யஎனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தைஇறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள்பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்தது அன்றி, என்னைப்பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம்புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறியதகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண்பிரஜை தான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்துவெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் "என்தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொல்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம்புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதியில்லாமலேவிவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது.சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது.எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன். அவரும் என்சொத்தில் தம்மால் இயன்றவரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும்குடியிலும் நாசம் பண்ணிவிட்டு கடைசியில் குடி மிகுதியால்குடல் வெடித்துச் செத்துப்போனார். பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி. இந்த விஷயத்தை விஷ்தாரமாகச் சொல்வது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம்நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையேஎன்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று. அதோ - பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப்பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் "கூட்டம்தெரிகிறதன்றோ? நடுவே யிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாகமுகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தமாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை யில்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில்மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு.அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால்குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம்வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதியில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையை கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் அம்மூவரும் முரண்பட்டு என் பிராணனை வாங்குகிறார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப்படுகிறது. நான் என்ன செய்வேன், இதனிடையே நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி, அடே இஸ்மேல்கான் நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டுவிடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொள். உன் துக்கம் தீரும் என்றார். நான் அந்தக் கனவைத் தெய்வ சாசனமாகவே நம்புகிறேன். நம்முடைய மனதில் தோன்றுவது தான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும் நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளையென்று நான் கருதுகிறேன். ஆனால் இந்த மூன்று ஸ்திரீகளிடமும் ஸமானமான பிரியம் இருக்கிறது. அவர்களும் என்னிடத்தில் சமமான காதல் கொண்டிருக்கிறார்களென்றும் நினைக்கிறேன். யாரைத் தள்ளுவது யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்கு தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன் என்று மகம்மதிய பிரபுவாகிய இஸ்மேல்கான் சொன்னான்.

இதற்குள் ரயில் ஸ்டேஷனுக்குள் வருகிற சத்தம் கேட்டது. அவர் திடுக்கென்றெழுந்து ஸலாம் ஸலாம் என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும் நல்லவேளை இந்த கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்புச் சொல்லுமுன் ரயில் வந்ததே என்று மகிழ்ச்சி கொண்டு ரயிலிலேறப் போய் விட்டேன். மகம்மது நபி கனவில் செய்த கட்டளைப்படியே அவன் நடந்து கொள்வானென்று நம்புகிறேன்.

எழுதியவர் : சுப்ரமணியபாரதி (9-Apr-14, 10:16 pm)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 813

மேலே