கருத்திலே பூத்தது 192189கலை

கருத்திலே பூத்தது ==/192189/==கலை

கொஞ்சம் சூது வாது வேண்டும்;
குறைபொறுத்து வாழ வேண்டும்
குறையில்லா காசும் வேண்டும்;
கொடுத்து வாங்கி வாழ வேண்டும்!
அந்தி வான அழகு வேண்டும்
ஆற்றங்கரை நடக்க வேண்டும்
வந்துவாசல் நிற்க வேண்டும்
வாசப் பூக்கள் ரசிக்க வேண்டும்;
மனைவிமடி சாய்ந்திருந்து
மரணமதைத் தள்ளிப் போட்டுப்
பிள்ளை முகம் தொட்டதற்குப்
பின்னும் முத்தம் கொடுக்க வேண்டும்;
அடுத்தவரின் முகம் பார்த்து
அவரைன் நலம் கேட்க வேண்டும்;
ஓடி ஓடி உழைத்தாலும்
தேடித் தேடிக் களைக்காமல்
வாய்க்கரிசிக் காக மட்டும்
வாழ்ந்திங்கு ஓயாமல்
அள்ளிப் போக ஆளின்றி
அவசரமாய்ச் சாகாமல்
ஆறடியே கிடைக்குமென
அவலத்தில் வீழாமல்
வாழ்க்கை முடிந்து போகுமுனர்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
கலை உனக்கு வாழ்த்தாக
கவிதையிதைக் கொள்ள வேண்டும்!
==== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (2-May-14, 1:00 pm)
பார்வை : 82

மேலே