===+++இச்சைக்கொண்ட மானிடமே+++===

நித்தம் எமக்கு போராட்டம்
நீலக்கடலோ நிற மாற்றம்
ரத்தம் சிந்தும் வாழ்வோட்டம்
செங்கடலாகும் பரிமாற்றம்...

உண்டுபிழைக்க உயிர்வாழ
ஆழக்கடலே ஆதாரம்
அதற்கும் அனுமதி தாராமல்
தடுக்கும் சிங்கள பரிவாரம்...

தமிழனின் அனுமதியில்லாமல்
கச்சத்தீவு தானமடா
பிச்சையிட்டக் கைகளையே
உடைப்பதுயென்ன நியாயமாடா...

உப்புக்கண்ணீர் கடலாக
சுரக்குது எங்கள் கண்களிலே
அதுதான் பாலோ என்றெண்ணி
பருகுது பசியில் குழந்தைகளே...

எத்தனை ஆட்சிகள் வந்தாலும்
எங்களுக்கில்லை வாழ்வுரிமை
எத்தனைத் தலைகள் வந்தாலும்
எங்களுக்கில்லைக் கடல் தலைமை...

தினம் தினம் செத்துப் பிழைப்பதற்கு
வேதனைத் தீயில் எறிவதற்கு
யார்தான்யிட்ட கட்டளையோ
எமக்கான வாழ்வு இங்கில்லையோ...

கட்டுமரங்கள் கைகளடா
கடலே எங்கள் கடவுளடா
வலையே எங்கள் உலகமடா
வாழ்க்கைத் தந்து உதவுங்கடா...

பிச்சையிட்டக் கைகளுமே
பிச்சைக்காக நீள்கிறது
இச்சைக்கொண்ட மானிடமே
இன்றே
எமக்கொரு முடிவை எடு...!!!


-----------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (22-May-14, 2:11 pm)
பார்வை : 173

மேலே