இளமைக்கு திரும்பும் வழி

உயிர் சிறகசைய
சிரிப்பு சித்திரங்களாய்
குறும்புகளுடன் கூடி விளையாட
வாசலெங்கும் வரைந்திருக்கும்
குழந்தைகளை காண்கையில்
குழைந்து போக தோன்றுகிறது

பூந்தளிர்களின் புன்னகையை
அச்சடித்த காகிதத்தால்
அடைய முடியுமா என்ன?
அழுத படி சிரிக்கவும்
சிரித்த நொடி அழவும்
உங்களில் எத்தனை பேருக்கு
இயலுமாகும் என்று
சொல்லுங்கள் சோதரர்களே

ஏசிக்குள் இருந்தபடி
“கரன்சி”கத்தைகளால் தான்
சந்தோஷத்தை சம்பாதிக்க
முடியும் என்பவனை
கல்லால் அடித்து கொன்றாலும்
கவலைப் பட தோணாது எனக்கு


சுவைமிகு இளமையின்
சுவடு பதிந்த-பழைய
தெருவை திரும்பிப் பார்க்கின்ற போது
பெருக்கி விட முடியாதபடி
பெருகி விடுகிடுகின்றன
விழிகளின் இரு வழிகளும்...
கண்ணீர் கழிவுகளால்

பாதுகாப்புடன்
நம்பிக்கைக்குரியதாய் இருந்த
நந்தவன நாட்கள் அது
நினைக்கும் போது
நெஞ்சுக்குள் பூ மலர
நாசி எங்கும் நறுமணம்

அன்னை மடி,தின்னை படி
இரண்டையும் காண்கையில்
இளமைக்கு திரும்புகிறேன்
இதயத்தால் நொந்து தினம்
இரவு,பகல் வருந்துகிறேன்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (3-Jun-14, 7:14 pm)
பார்வை : 138

மேலே